10 லட்சியம்.. 3 நிச்சயம்.. 50 தொகுதிகளில் அசத்தலாம்.. டிடிவி தினகரனுக்கு கிடைத்த "டேட்டா"
சென்னை: திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும், இன்னொரு கட்சி எவ்வளவு ஓட்டு பெறப் போகிறது என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது என்றால்.. அது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி பற்றிதான் இருக்கும்.
டிடிவி தினகரன் பொதுச் செயலாளராக உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இந்த தேர்தலில் எத்தனை சதவீதம் ஓட்டு பெறுகிறதோ அதை வைத்துதான் அதிமுக மற்றும் திமுகவுக்கு சாதக பாதக விளைவுகள் ஏற்படும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு, சசிகலா பிரசாரத்தின் உதவியுடன் வாக்குகளை குவிக்க வேண்டும் என்பது தினகரனின் திட்டமாக இருந்தது.

மீண்டு வந்த டிடிவி
திடீரென சசிகலா அரசியலுக்கு வர முடியாது என்று அறிவித்த காரணத்தால் தட்டுத்தடுமாறி போனார் தினகரன். ஆனால் எத்தனையோ அரசியல் விவகாரங்களை சமாளித்த அவர், இதில் இருந்தும் மீண்டு வந்தார் என்றுதான் சொல்லவேண்டும். அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்த தேமுதிகவுக்கு 60 தொகுதிகளை கொடுத்து தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டார். எஸ்டிபிஐ கட்சி உள்ளிட்டவற்றுக்கு தொகுதிகளை கொடுத்து தங்கள் பக்கம் சேர்த்துக்கொண்டு கவுரவமான கூட்டணியை உருவாக்கினார்.

தென் மாவட்டங்கள்
தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், வடமாவட்டங்களில் தேமுதிக.. இஸ்லாமியர்கள் கணிசமாக உள்ள பகுதிகளில் எஸ்டிபிஐ கட்சி சீட்டுக்களுக்கு பக்கா ஸ்கெட்ச் போட்டார்.

யாருக்கு சாதகம்
ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று தெரிந்த போதிலும் அதிமுகவுக்கு போகும் ஓட்டுக்களைப் பிரிக்க வேண்டும் என்பதுதான் இந்தக் கட்சியின் முக்கிய திட்டமாக இருந்தது. எனவேதான் தினகரன் கட்சி வாங்கப் போகும் ஓட்டுகள் அதிகமாக இருந்தால் அது அதிமுகவுக்கு பாதகம் என்றும் வாக்கு சதவீதம் குறைவாக இருந்தால் அது அதிமுகவுக்கு சாதகம் என்றும் கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். எனவேதான் திமுகவும் இதை கவனித்து வருகிறது.

தலைவர்கள் ஆலோசனை
தேர்தல் முடிந்ததும், ஒவ்வொரு கட்சி தலைவர்களும் கள நிலவரம் பற்றிய அறிவிப்பை பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் உள்ளிட்டோர் இதுபோல பல தரப்பினரிடம் இருந்தும் டேட்டா பெற்று ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல, தினகரனும் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் சில தகவல்கள் கிடைத்துள்ளன.

வெற்றி நிச்சயம்
மூன்று தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடும் என்று அவருக்கு களத்திலிருந்து ரிப்போர்ட் கிடைத்துள்ளதாம். கோவில்பட்டி, பாபநாசம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய மூன்று தொகுதிகளில் நிச்சயமாக அதிமுக வெற்றி பெறும் என்பது பல தரப்பு சோர்ஸ் அவரிடம் கொடுத்துள்ள தகவல் என்கிறார்கள்.

இரண்டாவது இடம்
திருவாடானை, உசிலம்பட்டி, பொள்ளாச்சி, முதுகுளத்தூர், திருப்பரங்குன்றம், பொள்ளாச்சி, காரைக்குடி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது. சுமார் 15 தொகுதிகளில் இவ்வாறு இரண்டாவது இடம் அல்லது மூன்றாவது இடம் பிடித்து விட முடியும் என்று அவருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது என்கிறார்கள்.

50 தொகுதிகள்
சுமார் 50 தொகுதிகளில் தொகுதிக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்க முடியும் என்பதும் அவருக்கு கிடைத்துள்ள தகவல் என்கிறார்கள். சசிகலாவுக்கு அதிமுக இடம் தரவில்லை என்பதுதான் தினகரன் தரப்பின் பிரதான குற்றச்சாட்டு. வெளிப்படையாக பிரச்சாரத்தில் இதை மட்டுமே அழுத்தி கூறாவிட்டாலும் திரைமறைவில் சமுதாயத் தலைவர்கள் மூலமாக இந்த காய்நகர்த்தல்கள் நடந்துள்ளன. அவர்களும் ஒட்டுமொத்தமாக தினகரன் கட்சிக்கு வாக்களித்துள்ளனர் என்றும் அந்த விவரங்களை தினகரன் இப்போது பெற்றுக் கொண்டார் என்றும் கூறுகிறார்கள்.

பணம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள், கடனாளி ஆகி விடக்கூடாது என்பதால் பல கோடிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்கிறார்கள். வெற்றி பெற முடியும் என்று உறுதியாக நம்பிய சுமார் 10 தொகுதிகளுக்கு அதிக தொகையை தினகரன் ஒதுக்கியதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications