அகவிலைப்படி உயர்வு.. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் எவ்வளவு உயரும்? மத்திய அரசு தரப்போகும் சர்ப்ரைஸ்!
சென்னை: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) ஜூலை மாதத்தில் 2%-க்கும் அதிகமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் இதற்கான முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு 4% வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தேசிய கவுன்சிலின் (கூட்டு ஆலோசனை பொறிமுறை) நிலைக்குழுவின் 63-வது கூட்டம் டெல்லியில் உள்ள சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊழியர்களின் முக்கியமான பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, கொரோனா காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத DA மற்றும் DR நிலுவைத் தொகையை வழங்குவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட, 18 மாத அகவிலைப்படி/அகவிலை நிவாரண (DA/DR) நிலுவைத் தொகை வழங்குவது குறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வு - பின்னணி
முன்னதாக, 1.2 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 2% உயர்த்தப்பட்டு, 55% ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த 2% உயர்வு, கடந்த 78 மாதங்களில் மிகக் குறைவான உயர்வு என்பதால், அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த அதிருப்தியை தணிக்கும் விதமாக, ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு 4% வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக, அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தப்படும். ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அடுத்த கட்ட உயர்வு ஜூலை மாதம் அறிவிக்கப்பட உள்ளது.
பணவீக்கமும், அகவிலைப்படியும்
அகவிலைப்படி உயர்வு, பொதுவாக பணவீக்கத்தை சமாளிக்கும் வகையில் நிர்ணயிக்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பணவீக்கம் சரிந்துள்ளதால், அகவிலைப்படி உயர்வு குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அரசு ஊழியர்களின் எதிர்ப்பின் காரணமாக, இந்த உயர்வு 4% ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அகவிலைப்படி நிலுவைத் தொகை (அரியர்)
ஏற்கனவே நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வுக்கான அரியர் தொகையை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலுவைத் தொகை, அடிப்படை ஊதியம் மற்றும் பெறப்பட்ட அகவிலைப்படி ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
DA நிலுவைத் தொகை = (புதிய DA % - பழைய DA%) × அடிப்படை ஊதியம் × மாதங்களின் எண்ணிக்கை
உதாரணமாக:
அடிப்படை ஊதியம்: ₹35,400
DA உயர்வு: 4%
மாதங்கள்: 4 (ஜனவரி முதல் ஏப்ரல் வரை)
நிலுவைத் தொகை கணக்கீடு: 0.04 × ₹35,400 × 4 = ₹5,664
இந்த எளிய முறையைப் பயன்படுத்தி, ஒவ்வொரு ஊழியரும் தங்கள் நிலுவைத் தொகையை கணக்கிடலாம். மே மாதம் வழங்கப்படும் சம்பளத்தில் இந்த அரியர் தொகை வழங்கப்படும். நாடு முழுவதும் 8.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த தொகையினை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு, மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உயர்வு, அவர்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications