வாட்ஸ் ஆப்பில் ஒரே ஒரு மெசேஜ்! ராயப்பேட்டை ஷாப்பிங் மாலில் சீரியல் நடிகையை தட்டி தூக்கிய போலீஸ்
சென்னை: மெத்தபெட்டமைன் எனும் போதை பொருளை வைத்திருந்ததாக சின்னத்திரை நடிகை மீனா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் போலீஸாரிடம் பிடிப்பட்டது எப்படி, போதை பொருளுக்கு அவர் பயன்படுத்திய நெட்வொர்க் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சுந்தரி சீரியலில் நடித்து வருபவர் நடிகை மீனா என்கிற எஸ்தர். இவர் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்திற்கு வந்திருந்தார். அப்போது அவரிடம் போதை பொருள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அங்கு மீனாவிடம் சோதனையிட்ட போது அவரிடம் 5 கிராம் மெத்தபெட்டமைன் எனும் அதிக வீரியம் கொண்ட போதை பொருள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இவர் யாரிடம், எங்கு இருந்து இந்த போதை பொருளை வாங்கினார், வேறு யாரிடமாவது போதை பொருளை விற்றுள்ளாரா போன்றவை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மீனாவிடம் போதை பொருள் இருப்பது எப்படி போலீஸாருக்கு தெரிந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் விருந்து நிகழ்ச்சிகளில் மெத்தபெட்டமைன் போதை பொருள் எப்படி சப்ளை செய்யப்படுகிறது என்பதை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். அப்போதுதான் நைஜீரியாவை சேர்ந்த ஒரு இளைஞரை போலீஸார் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது ஒரு இளைஞர் குறித்த தகவல்களை அவர் வெளியிட்டார். இந்த நிலையில் அந்த இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையில் விருந்து நிகழ்ச்சிகளுக்கு மெத்தபெட்டமைன் போதை பொருள் ஒரு பெண் மூலமாக போவதாக தெரிவித்தார்.
இதையடுத்து அந்த பெண்ணை பிடிப்பது எப்படி என கேட்ட போது அந்த இளைஞர், ஒரு வாட்ஸ் ஆப் எண்ணை கொடுத்து, இந்த எண்ணுக்கு "பார்ட்டிக்கு மெத் வேண்டும்" என மெசேஜ் அனுப்பியதும், ராயப்பேட்டையில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலின் 7ஆவது கேட் அருகே வர சொன்னார்.
அதன் பேரில் பெண் போலீஸாருடன் மாறுவேடத்தில் அங்கு சென்ற போது அவர் தப்பியோட பார்த்தார். உடனே அவரை மடக்கி பிடித்தனர். அவருடைய ஹேண்ட பேக்கில் சோதனை செய்த போது அவரிடம் சிறிய பாக்கெட்டுகளில் மெத்தபெட்டமைன் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது, அவர் கோவிலம்பாக்கத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது. மேலும் டெடி திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தாராம். அது போல் சுந்தரி சீரியலிலும் அவர் நடித்துள்ளார்.
படவாய்ப்புகளும் சீரியல் வாய்ப்புகளும் இல்லாததால் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வெல்கம் கேர்ளாக இருந்து வந்தாராம். அப்போது கிடைத்த தொடர்புகளை வைத்து மெத்தபெட்டமைன் போதை பொருளை ரூ 1000 க்கு வாங்கி ரூ 3000 வரை விற்பனை செய்தாராம். இவரிடம் சினிமா துறையில் இருப்போர் யாரெல்லாம் மெத்தபெட்டமைனை வாங்கியுள்ளனர் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications