சென்னையில் போலி வாரிசு சான்றிதழ்.. வெளிநாட்டில் வசிப்பவரின் 2.5 கோடி நிலம் பறிக்கப்பட்டது எப்படி?
சென்னை: சென்னையை பொறுத்த வரை நிலம் வாங்கிப்போட்டவர்கள் அவ்வப்போது நிலம் தமது பெயரில் தான் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதேபோல் மூதாதையர் பெயர்களில் சொத்துக்கள் இருந்தால், குறிப்பாக பலருக்கும் உள்ளது என்றால், பாகப்பிரிவினை செய்யாத நிலம் என்றால், இன்னும் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் இரண்டு தலைமுறைக்கு முன்பான சொத்து என்றால் எச்சரிக்கை அதிகமாக இருக்க வேண்டும். நிலத்தை போலி வாரிசு சான்றிதழ் அபகரிப்பதாக புகார்கள் உள்ளது. ரூ.2.5 கோடி நில மோசடி வழக்கில் முன்னாள் எல்லைப்பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் எங்கு யார் நிலம் வாங்கி போட்டிருந்தாலும், நிலத்தின் ஆவணங்கள் உங்கள் பெயரில் தான் உள்ளதா அல்லது நீங்கள் யார் பெயரில் வாங்கி போட்டீர்களோ, அவர்கள் பெயரில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். குறிப்பாக இரண்டு தலைமுறை அல்லது மூன்று தலைமுறைக்கு முந்தைய சொத்துக்கள் என்றால், அதுவும் பாகம் பிரிக்கப்படாத நிலம் அல்லது வீடு அல்லது வீட்டு மனை இருக்கிறது என்றால், அந்த சொத்து இப்போது யார் பெயரில் உள்ளது என்பதை கவனமாக பாருங்கள்.

ஏனெனில் சிலர் தாத்தா சொத்து பேரனுக்கு என்றும், தாத்தா சொத்து பேத்திக்கு என்றும் சம்பந்தமே இல்லாமல் திடீரென வருவார்கள். சிலர் குடும்பத்தில் சம்பந்தமே இல்லாமல் வாரிசு சான்றிதழ் வாங்கி நிலத்தை அபகரிக்கும் சம்பவங்களும் நடக்கிறது. குறிப்பாக மிக வயதானவர்கள் மற்றும் இறந்து போனவர்களின் ஆள் இல்லாத சொத்துக்களை குறிவைத்து சில கும்பல் நில அபகரிப்பு செய்ய திட்டமிடுகிறார்கள். இன்னும் சிலரது பெற்றோர் அல்லது மூதாதையர் நிறைய சொத்துக்களை வாங்கி போட்டு இறந்து போயிருப்பார்கள்.
அதனை சரியாக பிள்ளைகளிடம் தெரிவிக்காமல் விட்டிருப்பார்கள். அந்த நிலங்களை வெளிநாடுகளில் பேரன் அல்லது பேத்திகளுக்கோ சுத்தமாக தெரியாமல் இருக்கும். அப்படிப்பட்ட நிலங்களையும் சிலர் ஆக்கிரமிக்க திட்டமிடுகிறார்கள். இப்படி பல்வேறு வகையில் நில ஆக்கிரமிப்புகள் செய்ய முயற்சிகள் நடக்கிறது. சென்னையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
மலேசியாவை சேர்ந்த ராஜசேகரன் (வயது 60) என்பவரின் தாயார் மறைந்த சாரதாதேவி என்பவருக்கு சொந்தமாக சென்னை சூளைமேட்டில் ரூ.2½ கோடி மதிப்புள்ள நிலம் இருந்துள்ளது. இந்த நிலத்தை போலி வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் சிலர் அபகரித்துள்ளார்கள்.
இதுதொடர்பாக, ராஜசேகரன் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த வழக்கில் முதல் கட்டமாக குபேரன் என்பவரும், பாபு என்பவரும் கைது செய்தனர். இந்த வழக்கில் மதுரை திருமங்கலத்தை சேர்ந்த குமார் (60) என்பவர் முக்கிய குற்றவாளி ஆவார். அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர். இவர் எல்லைப் பாதுகாப்பு படையில் வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். குமாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் திருமங்கலத்தில் வைத்து கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை தேடி வருவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications