கோயம்பேடு முழுக்க மனித தலைகள்.. வெளியே செல்ல முடியாமல் தவித்த பயணிகள்.. விடிய விடிய நடந்தது என்ன?
சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை கோயம்பேட்டில் ஏராளமானோர் புறப்பட்டு சென்ற நிலையில், நேற்று இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை காத்திருந்தும் போதிய பஸ் வராததால் பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். பஸ்களை வெளியே செல்ல விடாமல் மறித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி சனி ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்களுக்கு பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் நேற்று சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. மற்ற பகுதிகளுக்கு தாம்பரம், பூந்தமல்லி, கேகே நகர் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன.

நேற்று மாலை கோயம்பேட்டில் பெரிய அளவில் கூட்டம் இல்லை. வழக்கமான கூட்டமே இருந்தது. பள்ளி முடிந்து, அலுவலகம் முடிந்து பலரும் இரவு 8 மணிக்கு மேல் தான் புறப்பட்டு கோயம்பேடு வந்ததால் அதன்பிறகே கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.. இரவு 9 மணியில் இருந்தே கூட்டம் மிக அதிமானது. 10 மணிக்கு மேல் கோயம்பேட்டில் கால் வைக்கும் இடம் கூட இல்லாத அளவிற்கு மனித தலைகள் காணப்பட்டன. ஆனால் அந்த நேரத்தில் பேருந்துகள் பெரிய அளவில் இல்லை.
சேலம், திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வழக்கம் போல் இயக்கப்பட்டன. திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், நெய்வேலி தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அரசு விரைவுப் பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளும் தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டன.
ஆனால் இது தெரியாமல் சிலர் தவறுதலாக கோயம்பேட்டிற்கு வந்ததால் குழப்பம் ஏற்பட்டது. தங்கள் இயக்க ஊர்களுக்கு பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்தே இயக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரத்திற்கு சென்று தான் பயணம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் ஏற்கவில்லை.. தொடர்ந்து போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து பயணிகளின் கோரிக்கையை ஏற்று வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய பஸ்களை மாற்றி சிதம்பரம் மார்க்கத்திற்கு இயக்க அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
இதேபோல் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்வதற்காக முன்பதிவு செய்யாமல் பயணம் மேற்கொள்ள கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளர்கள் பலர் இரவு 10 மணிக்கு மேல் குவிந்தனர். ஆனால் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை காத்திருந்தும் பஸ் வரவில்லை.. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், வெளியே செல்லும் பேருந்துகளை மறித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், உடனடியாக மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்கள்.












Click it and Unblock the Notifications