அடுத்து நெல்லை- பெங்களூர் இடையே பறக்க போகும் வந்தே பாரத்? பொதுமக்கள் வைக்கும் கோரிக்கை என்ன
சென்னை: தமிழ்நாட்டில் ஏற்கனவே மூன்று ரூட்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயங்கி வரும் நிலையில், அடுத்த வந்தே பாரத் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகில் பெரிய ரயில் நெட்வொர்க்கை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் போதிலும், போதிய வசதி இருப்பதில்லை உட்பட பல புகார்கள் இந்திய ரயில்வே மீது நீண்ட காலமாக இருக்கிறது.

அதற்குப் பதிலடியாக ரயில்வே அறிமுகப்படுத்தியது தான் வந்தே பாரத் ரயில்கள். முழுக்க ஏசி, தானியங்கி கதவுகள் என்று பல அதிநவீன வசதிகள் என் வந்தே பாரத் ரயில்களில் இருக்கும் ஒவ்வொன்றும் வாவ் வசதிகள் தான்.
வந்தே பாரத்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இப்போது மூன்று ரூட்களில் வந்தே பாரத் இயக்கப்பட்டு வருகிறது. முதலில் சென்னை- பெங்களூர்- மைசூர் வழியாக வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து சென்னை- கோவை இடையே கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி நேரில் தொடங்கி வைத்தார். மேலும், சென்னை- நெல்லை இடையேயான வந்தே பாரத்தும் சமீபத்தில் தான் தொடங்கப்பட்டது.
இந்த மூன்று ரூட்களிலும் வந்தே பாரத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பெரும்பாலான நேரம் இந்த ரயில்களில் டிக்கெட் கிடைப்பதில்லை. அந்தளவுக்குத் தமிழ்நாட்டில் இயக்கப்படும் இந்த மூன்று வந்தே பாரத் ரயில்களுக்கும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. பண்டிகை மற்றும் விடுமுறை நாட்கள் என்று மட்டும் இல்லாமல் அனைத்து நாட்களிலும் இந்த ரயில்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
எந்த ரூட்கள்: தமிழகத்தில் வந்தே பாரத் ரயில்களுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கும் நிலையில், இப்போது நான்காவது ரூட்டாக நெல்லை- பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே, நெல்லை- சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கும் நிலையில், நெல்லை- பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மாணவர்கள், ஐடி ஊழியர்கள் என்று நெல்லையில் இருந்து பலரும் பெங்களூருக்கு பயணம் செய்து வருகின்றனர். இப்போது இந்த ரூட்டில் சதாப்தி போன்ற ரயில்கள் இல்லாத நிலையில், மற்ற ரயில்களில் டிக்கெட் இல்லை என்றால் பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளையே பயன்படுத்த வேண்டி உள்ளது. ஆம்னி பேருந்து கட்டணம் அதிகமாக இருக்கும் நிலையில், இந்த இரு நகரங்களுக்கும் இடையே வந்தே பாரத் இயக்கப்பட்டால் அது பொதுமக்களுக்குப் பெரியளவில் உதவும் என்றே கூறப்படுகிறது.
கோரிக்கை: ரயில் ரூட்டை பொறுத்தவரை நெல்லை- பெங்களூர் இடையே சுமார் 589 கி.மீ. தூரம் உள்ள நிலையில், அவை முழுக்க முழுக்க மின் மயமாக்கப்பட்டு உள்ளது. அதிலும் நெல்லை- திண்டுக்கல் மற்றும் சேலம்- பெங்களூர் இடையே இரட்டை அகல ரயில் பாதை இருக்கிறது. திண்டுக்கல் இடையே 159 கி.மீ. தூரத்துக்கு மட்டுமே ஒற்றை ரயில் பாதை அமைந்துள்ளது.
மேலும், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ராஜ்தானி, சதாப்தி, ஜனசதாப்தி போன்ற அதிவிரைவு ரயில்கள் எதுவும் இல்லை என்பதால் சென்னை பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மக்களிடையே அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications