ஆஹா.. இப்படியும் சிலர்! காற்று அடிக்க குனிய வேணாம் - மதுரை பெட்ரோல் பங்கு உரிமையாளரின் மனிதாபிமானம்
மேலோட்டமாக வாகனங்களுக்கு காற்று நிரப்புவது சுலபமான வேலை என்று தோன்றும். ஆனால், அந்த வேலையை செய்பவர்கள் அதன் கஷ்டத்தை நன்கு உணர்ந்திருப்பார்கள்.
மதுரை: பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு காற்று அடிக்கும் தொழிலாளர்கள் குனிந்து நிமிர்ந்து கஷ்டப்படும் நிலையை அதை தவிர்க்க மதுரையில் உள்ள பெட்ரோல் பங்கில் அவர்கள் நலன் கருதி சிறப்பான ஒரு யுக்தியை கையாண்டு இருக்கிறார்கள். இதனால் அவர்கள் குனிந்து நிமிராமல் நின்றபடியே வாகனங்களுக்கு காற்று அடிக்க முடியும்.
முன்பெல்லாம் பைக், கார் மெக்கானிக் கடைகளில் வாகனங்களுக்கு காற்று அடிக்கும் இயந்திரங்களை வைத்திருப்பார்கள். அவர்களிடம் 10 முதல் 20 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி காற்று அடிப்பது வழக்கம்.
ஆனால், கடந்த சுமார் 10 ஆண்டுகளாக நாடு முழுவதும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் இதர சேவைகளும் தொடங்கப்பட்டன.

பெட்ரோல் பங்குகள்
குறிப்பாக பெட்ரோல் பங்குகளில் இன்சூரன்ஸ் மையங்கள், வணிக வளாகங்கள், வாகன உதிரி பாகங்கள், மெக்கானிக்குகள், காற்று அடிக்கும் கருவிகள் போன்றவை கொண்டு வரப்பட்டன. குறிப்பாக பெட்ரோல் பங்குகளில் இலவசமாகவே காற்று நிரப்பி தருகிறார்கள். இதனால் பெரும்பாலான மக்கள் பெட்ரோல் நிரப்ப செல்லும்போதே வாகனங்களுக்கு காற்று அடிப்பது வழக்கம்.

காற்று அடிக்கும் ஊழியர்கள்
இதற்காக ஒரு ஊழியரை சில பங்குகளில் நியமித்து உள்ளனர். ஆனால், புற நகர் கிராம பகுதிகளில் உள்ள பங்குகளில் பெட்ரோல் போடும் தொழிலாளரே தங்கள் வேலைக்கு மத்தியில் காற்று நிரப்பி கொடுக்கிறார்கள். சில பங்குகளில் வாகன ஓட்டியே காற்று நிரப்பிக்கொள்ளும் முறையும் இருக்கிறது.

கடினமான வேலை
ஆனால், வரும் வாகனங்கள் ஒவ்வொன்றுக்கும் காற்று நிரப்பிக்கொடுப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இயந்திரத்தில் அளவை நிர்ணயித்துவிட்டு ஒவ்வொரு சக்கரத்துக்கும் குனிந்து நிமிர்ந்து காற்று நிரப்ப வேண்டும். சில வாகன சக்கரங்களில் இரவு நேரங்களில், காற்று அடிக்க வைத்திருக்கும் வாய் பகுதியே தெரியாத அளவுக்கு ஏதேதோ வடிவமைத்து வைத்திருப்பார்கள்.

குறைவான ஊதியம்
இதையும் தாண்டி தங்கள் வாகனங்களுக்கு குனிந்து நிமிர்ந்து காற்று நிரப்பிக் கொடுக்கும் தொழிலாளரையும் ஒரு மனிதராக மதித்து பைக்கை விட்டே கீழே இறங்க மாட்டார்கள். சிலர் மட்டும் 5 முதல் 10 ரூபாய் டிப்ஸ் கொடுத்துவிட்டு செல்வார்கள். இப்படி நாள் முழுவதும் கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியமும் நிரந்தர வேலையும் கூட இல்லை.

மதுரை பெட்ரோல் பங்கு
மேலோட்டமாக பார்த்தால் இது மிகவும் சுலபமான வேலை என்று தோன்றும். ஆனால், அந்த வேலையை செய்பவர்கள் அதன் கஷ்டத்தை நன்கு உணர்ந்திருப்பார்கள். இந்த சூழலில்தான் மதுரையில் உள்ள பெட்ரோல் பங்கு ஒன்றில் காற்று நிரப்பும் தொழிலாளர்கள் குனிந்து நிமிர்ந்து கஷ்டப்படுவதை தவிர்க்க அவர்களுக்கு என சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்து இருக்கிறார் அதன் உரிமையாளர்.

உரிமையாளரின் மனிதாபிமானம்
மதுரை எக்கோ பார்கில் உள்ள தியாகராஜா இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையத்தில் காற்று அடிக்கும் ஊழியர்கள் குணிந்து நிமிராமல் நின்றபடியே பைக்குகளுக்கு காற்று அடிக்கும் வகையில் தொட்டிபோன்று கட்டிக்கொடுத்து இருக்கின்றனர். அதற்குள் தொழிலாளர் இறங்கி குனியாமலேயே பைக்குக்கு காற்று பிடித்து கொடுக்கிறார். சமூக வலைதளத்தில் வெளியான இந்த படம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதனை பார்த்த ஒரு பதிவாளர் தூத்துக்குடியிலும் இதுபோல் ஒரு பெட்ரோல் பங்கு இருப்பதாக கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications