ரொம்ப வருத்தமாக இருக்கு! தமிழில் பேச முடியலையே! மேடையிலேயே உருகிய ராஜ்நாத் சிங்.. என்னாச்சு?
சென்னை: இந்தியாவில் மிகவும் பழமையான மொழி என்பதோடு, இந்திய மொழிகளின் தாய் மொழியாக இருக்கும் தமிழில் பேச முடியவில்லையே என மேடையிலேயே மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மிகவும் வருத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகி வருகிறது. அதன்படி நாடு முழுவதும் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த பொதுக்கூட்டங்கள் தமிழ்நாட்டிலும் நடந்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகை தந்தார். தென்சென்னை லோக்சபா தொகுதி நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு வேலூரில் நடந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அந்த வரிசையில் தான் இன்று சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூரில் பாஜகவின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசினார். அப்போது அவர் தனக்கு தமிழ் மொழி பேச தெரியாமல் போனதை நினைத்து மனம் வருந்தினார். இதுபற்றி ராஜ்நாத் சிங் கூறியதாவது:
வணக்கம்.. சகோதர, சகோதரிகளே நண்பர்களே உங்கள் முன்பு சென்னையில் இருப்பதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது மிகவும் உற்சாகமான, சிறந்த பண்பாடு மிகுந்த நகராகும். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக நான் இருக்கிறேன். ஆனால் போர்படையை இதற்கு முன்பு மிகவும் திறமையாக கையாண்டவர்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆவார்கள். அவர்கள் பிறந்த பூமியில் இருப்பதை பெருமையாக கருதுகிறேன்.
தமிழ்நாடு திருவள்ளூவர் போன்ற மிகப்பெரிய கவிஞர்களையும், அறிஞர்களை தந்த நிலம். திருக்குறள் என்ற நூலை திருவள்ளூவர் தந்துள்ளார். திருக்குறளின் கருத்துகள் பாடல் வரிகளாக மட்டுமின்றி மிக முக்கிய முடிவுகளை எடுக்க வழிகாட்டும் நூலாக உள்ளது. சித்தர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் வாழ்ந்த பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சி.
தமிழ் மிகவும் பழமையான மொழி. தமிழ் மொழி அழகான மொழி மட்டுமல்ல. எல்லா மொழிகளுக்கான தாயான மொழியாக தமிழ் உள்ளது. இந்தியாவின் பழமையான மொழியாகவும், தொன்மை கொண்ட மொழியாவும் உள்ளது. இத்தகைய தொன்மை கொண்ட தமிழ் மொழியில் பேச விரும்புகிறேன். ஆனால் தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என வருந்துகிறேன். தமிழ் மொழி எனக்கு தெரியாது என்பதால் எனது தாய்மொழியான இந்தியில் பேச உள்ளேன்'' எனக்கூறி தனது உரையை தொடங்கினார்.












Click it and Unblock the Notifications