”தாய்ப்பாசத்துல மோடி...” 100-வது பிறந்தநாளன்று நெகிழ்ச்சியோடு வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: 100 வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடியின் தாய்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபாய் மோடி அம்மையார் குஜராத் மாநிலம் காந்திநகரில் வசித்து வருகிறார்.
பிரதமராக பதவியேற்ற 8 ஆண்டுகளில் அடிக்கடி குஜராத்துக்கு பயணம் செய்யும் பிரதமர் மோடி தனது தாயாரை சந்திப்பது வழக்கம்.

ஹீராபாய் மோடி
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளன்றும், தனது தாயின் பிறந்தநாளன்றும், தேர்தல் சமயங்களிலும், தேர்தலில் வென்ற பிறகும் தனது தாயை தவறாமல் சந்தித்து ஆசி பெறுவார். பிரதமர் நரேந்திர மோடி தனது தாயிடம் ஆசிபெற்று அவருடன் பேசும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாவதும் வழக்கம்.

100 வது பிறந்தநாள்
அந்த வகையில் இன்று பிரதமரின் தாய் ஹீராபாய் மோடி தனது 100 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை கொண்டாடுவதற்காக , குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள தனது தாயின் வீட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கு தனது தாயாரை சந்தித்து நலம் விசாரித்த மோடி, அவருக்கு இனிப்பு ஊட்டினார்.

பாதபூஜை
தாயுடன் சேர்ந்து சிறப்பு வழிபாடு செய்த அவர், தாயின் காலை கழுவி அந்த நீரை கண்ணில் தொட்டு பாத பூஜை செய்தார். மோடியின் தாய் நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல் நலத்துடனும் வாழ பல கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. குறிப்பாக வாட்நகரில் உள்ள பிரபலமான ஹட்கேஷ்வர் கோவிலில் சிறப்புப் பூஜைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஸ்டாலின் வாழ்த்து
இந்த நிலையில், 100 வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடியின் தாய்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அதில், "பிரதமர் தனது தாய் மீது வைத்திருக்கும் அன்பை நான் அறிவேன். சென்னை வரும்போதெல்லாம் எனது தாயாரின் உடல்நலம் குறித்து விசாரிப்பீர்கள். உங்களுக்கும், உங்கள் தாய்க்கும் இந்நாளில் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்" என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications