அண்ணாமலையை நம்பி வந்தோம்.. மோசடி செய்தவர்களையே பாஜக ஆதரிக்கிறது - ஆருத்ராவால் பாதிக்கப்பட்டவர் வேதனை
சென்னை: ஆரூத்ரா நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாஜகவும் உதவும் என்று நினைத்தால், மோசடியில் ஈடுபட்டவர்களுக்கே அக்கட்சி ஆதரவாக இருப்பதாக பாதிக்கப்பட்டவர் வேதனை தெரிவித்து உள்ளார். தங்கள் புகார் மனுவை வாங்காமல் பாஜக வெளியே அனுப்பியதாக அவர் கூறி உள்ளார்.
பாஜக மாநில நிர்வாகி ஹரீஷ் இயக்குநராக உள்ள ஆருத்ரா நிறுவனம் மக்களிடம் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் திரளாக மனு அளிக்க வந்தனர். ஆனால், அவர்களிடம் பாஜக நிர்வாகிகள் மனு வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பலர் அதிருப்தி அடைந்தனர்.

இது குறித்து ஒன் இந்தியா தமிழுக்கு பாதிக்கப்பட்ட நபர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, "நாங்கள் ஆருத்ரா நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி இருந்தோம். அதில் மோசடி செய்துவிட்டார்கள். எனவே பாஜக தலைவர் அண்ணாமலையை பார்த்து மனுகொடுத்து புகார் அளிக்கலாம் என்று வந்தோம். ஏனென்றால் பாஜக பின்புலமாக உள்ளவர்களை கைது செய்து உள்ளார்கள். எனவே அண்ணாமலையிடம் புகாரளித்தால் ஒரு நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் வந்தோம். ஆனால், மனுவை வாங்க மறுக்கிறார்கள்.
நீங்கள் எதுவாக இருந்தாலும் தபாலில் அனுப்புங்கள் என்று சொல்லி எங்களை வெளியே அனுப்பி விட்டார்கள். இது அவர்கள் ஆட்களை பாதுகாப்பதைபோல் தோன்றுகிறது. அண்ணாமலை சமூக அக்கறை கொண்டவர். மக்கள் மீது நம்பிக்கை கொண்டவர். ஐபிஎஸ் என்பதால் அவர் தனது கடமையை செய்வார் என்று நினைத்தோம். இன்று அவர் தலைவராக இருக்கும்போது மனுவை கொடுத்தால் தீர்வு கிடைக்கும் என்று நினைத்த நிலையில், எங்கள் மனுவையே வாங்காமல் திருப்பி அனுப்புவது கஷ்டமாக உள்ளது.

இதை நாங்கள் யாரிடம் சொல்வது? இங்கு அரசியல் பின்புலத்தில் அவர்கள் இருப்பதால்தான் இதை சொல்கிறோம். இதில் பாஜக கட்சி சார்ந்தவர்கள் தலையிடவில்லை என்றால் நாங்கள் மனு கொடுக்கப்போவது கிடையாது. இவர்கள் சொன்ன பதிலை வைத்து பார்க்கையில் எங்களை ஏமாற்றுவதைபோல் உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரை பார்த்து மனு கொடுக்க உள்ளோம்.
நான் ரூ.13 லட்சம் கொடுத்துள்ளேன். ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.25 ஆயிரம் தருவதாக சொன்னார்கள். அட்சய திருதியை ஆஃபர் என்று ரூ.30 ஆயிரம் தருவார்கள் என கூறினார்கள். அந்த சமயத்தில்தான் நாங்கள் பணம் கொடுத்தோம். அடுத்த 15 நாட்களில் நிதி நிறுவனத்தையே மூடிவிட்டார்கள். ஒரு முறைகூட பணம் வாங்கவில்லை. இருக்கும் பணத்தை எல்லாம் கொடுத்துவிட்டு அதில் ஒரு ரூபாய் கூட வரவில்லை என்று நினைக்கும்போது கஷ்டமாக உள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதாக சொல்கிறார்கள். ரூ.2 ஆயிரம் கோடியை முடக்கி உள்ளதாக கூறுகிறார்கள். அதை உரியவர்களிடம் ஒப்படைக்க சொன்னதாகவும் தகவல் வருகிறது. அதை யாருக்கு தருவார்கள்? எப்படி தருவார்கள்? என்று எதுவும் தெரியவில்லை. தற்போது ஹரீஷ் என்பவர் கைதாகி உள்ளார். அவர் பாஜக மாநில துணைத் தலைவராக உள்ளார்.
பாஜக இந்த விவகாரத்தில் மக்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று பார்த்தால் மக்களை ஏமாற்றியவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எனவே இவரிடம் முறையிட்டால் தீர்வு கிடைக்கும் என்றுதான் இங்கு வந்தோம். ஆனால், அண்ணாமலை அலுவலகத்தில் இல்லை. அலுவலகத்தில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, மனு வாங்குங்கள் என்று சொன்னால் வாங்க மறுக்கிறார்கள்.
பின்பலத்தில் பாஜக சாயல் இருப்பதால் இந்த விவகாரம் கட்சி ரீதியாக இருக்குமோ என்று பயப்படுகிறோம். அதனால் தலைவரை பார்த்து கோரிக்கை வைத்தால் அவர் உதவுவார் என்று நம்பினோம். கட்சியில் கீழே இருப்பவர்களுக்கு நல்லது செய்வார் என்றுதான் எதிர்பார்த்தோம். ஆனால், இன்று மனுவே வாங்க மறுக்கிறார்கள் என்று நினைக்கும்போதுதான் கஷ்டமாக உள்ளது." என்றார்.












Click it and Unblock the Notifications