நான் ஊழல் வழக்குல எந்த சிறைக்கும் போகல.. பேச்சுவாக்குல கனிமொழியை வாரிய தமிழிசை!
சென்னை: தான் எந்த ஊழல் வழக்கிலும் சிறை தண்டனை பெறவில்லை, ஆகையால் நிச்சயம் தூத்துக்குடியில் வெற்றி பெறுவேன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 11ஆம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி லோக் சபா தேர்தல் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிட்டார். அதேபோல் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டார்.

தமிழிசை பேட்டி
ஸ்டெர்லைட் விவகாரம் பூதாகரமான தூத்துக்குடியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என கனிமொழியும் தமிழிசையும் சூறாவளி பிரச்சாரம் செய்தனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஆளுமைகள் மறைவு
அப்போது அவர் பேசியதாவது, தமிழக தேர்தல் களத்தை கணிக்க முடியாது. அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட புதிய கட்சிகள் களம் கண்டுள்ளன. தமிழகத்தில் இரண்டு அரசியல் ஆளுமைகளின் மறைவுக்கு பின் நடைபெற்ற தேர்தல் இது.

அங்கீகாரகம் கேட்டேன்
மீண்டும் மோடி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம். தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு தான் மக்களின் ஆதரவு உள்ளது. எனது 20 ஆண்டு கால அரசியல் வாழ்க்கைக்கு அங்கீகாரம் கொடுங்கள் என்று கேட்டுதான் மக்களிடம் வாக்கு சேகரித்தேன்.

ஊழல் வழக்கு
நான் எந்த ஊழல் வழக்கிலும் நான் சிறை செல்லவில்லை. ஆகையால் மக்கள் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வார்கள் என நம்புகிறேன். இவ்வாறு தமிழிசை கூறினார். தமிழிசை பேசும் போது திமுக வேட்பாளரான கனிமொழி 2ஜி ஊழல் வழக்கில் திகார் சிறைக்கு சென்றதை குத்திக்காட்டும் வகையில் தான் எந்த ஊழல் வழக்கிலும் சிறை தண்டனை பெறவில்லை என கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications