ஸ்டெர்லைட் போராட்டத்தில் "சமூக விரோதிகள்"...ஆதாரம் இல்லாமல் பேசி விட்டேன்.. ரஜினி திடீர் பல்டி
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடந்த போது சமூக விரோதிகள் ஊடுருவியதாக கூறியதற்கு தம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: ஸ்டெர்லைட் போராட்டம் நடைபெற்ற போது கூட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக கூறியதற்கு எந்த விதமான ஆதாரமும் தம்மிடம் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்திற்கு எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் ரஜினி இதனைத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில், கடந்த 2018ஆம் ஆண்டு மே மாசம் 22ஆம் தேதி காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
இதுவரை பல கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. மொத்தம் 500க்கும் மேற்பட்டவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதைதவிர, 679 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டன. சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

ரஜினியின் சர்ச்சை பேட்டி
தூத்துக்குடி சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறிய நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில், வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளின் ஊடுருவலே காரணம் என்றார்.

புனித போராட்டம்
காவல்துறையினரை மட்டும் குறை சொல்வது தவறு. மக்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதும் காவல்துறையினர்தான். புனிதமான போராட்டம் கூட ரத்தக்கறையுடன் முடிந்து உள்ளது என்று கூறினார். ரஜினியின் இந்த பேச்சு சர்ச்சையானது. பல அமைப்பினர்களும் கொந்தளித்தனர்.

ரஜினி கருத்துக்கு கண்டனம்
ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால்தான் துப்பாக்கி சூடு நடந்தது என்று ரஜினி கூறியது பெரும் பரபரப்பையும், சர்ச்சையினையும் ஏற்படுத்தியது. பலரும் கண்டனத்தை பதிவு செய்தனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, ரஜினிக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. இரண்டு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. நேரில் ஆஜராகாதது குறித்து விசாரணை ஆணையத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

எழுத்துப்பூர்வ பதில்
ரஜினி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கேட்கப்பட்டது. உச்சநட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் நடிகர் என்பதால், ஆஜராகும்போது ரசிகர்கள் அதிகளவில் கூடிவிடுவார்கள். அதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும். எனவே நேரில் ஆஜராக விலக்கு தர வேண்டும். கேள்விகளை எழுத்து மூலம் தந்தால் அதற்கு பதில் தர தயார் என்று ரஜினி தரப்பில் சொல்லப்பட்டிருந்தது.

ஆதாரம் இல்லை
இதையடுத்து விசாரணை ஆணையத்தின் 15 கேள்விகளுக்கும் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்து தனது கைப்பட கடிதம் எழுதிய கடிதத்தினை வழக்கறிஞர் மூலமாக சமர்ப்பித்துள்ளார். அதில் தூத்துக்குடியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு தற்செயலாக நடைபெற்றது என்றும் அப்போது ஆதாரங்களின் அடிப்படையில் தான் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications