டெல்லிக்கு பறக்கும் புகார்.. உறுதியாக சொன்ன காயத்ரி.. பெயரை கூட சொல்லாத மோடி.. அண்ணாமலைக்கு சிக்கல்?
சென்னை: பாஜகவில் இருந்து தன்னை சஸ்பெண்ட் செய்தது குறித்து காயத்ரி ரகுராம் டெல்லி பாஜகவில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக முக்கியமான புகார்களை அவர் அடுக்கி உள்ளார்.
தமிழக பாஜகவில் நிலவி வந்த பனிப்போர் தற்போது உட்கட்சி மோதலாக வெடித்து உள்ளது. குழாயடி சண்டை போல ட்விட்டரில் பாஜக நிர்வாகிகள் மாறி மாறி மோதிக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.
இந்த செய்தியை எழுதிக்கொண்டு இருக்கும் போது கூட பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கும் காயத்ரி ரகுராமிற்கும் இடையில் சண்டை நடந்து கொண்டு இருக்கிறது. பாஜக நிர்வாகிகளுக்கு இடையிலான சண்டை.. எப்போதும் கோஷ்டி மோதல் நிலவும் காங்கிரஸ் கட்சியின் பூசலை விட மோசமாகி உள்ளது.

சண்டைக்கு காரணம்
இந்த சண்டைக்கான காரணம் கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்திலேயே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி அப்போது பாஜகவின் கலைப்பிரிவு தலைவராக இருந்தார் காயத்ரி ரகுராம். இவருக்கும் அதே பிரிவில் இருந்த பெப்சி சிவா என்பவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து சிவா குறித்து காயத்ரி ரகுராம் கட்சி தலைமையிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் இதில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு காயத்ரி ரகுராம் அந்த பதவியில் இருந்தும் நீக்கப்பட்டு பெப்சி சிவா அந்த பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மோதல்
அதன்பின் 2 மாதங்களாக பதவி இல்லை என்று காயத்ரி ரகுராம் வருத்தம் தெரிவித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு அயலக தமிழர் மற்றும் பிறமாநில தமிழர் நலப்பிரிவின் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் , காசியில் நடந்த காசி தமிழ் சங்கம் விழாவிற்கு இவரை அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இங்குதான் மோதல் தொடங்கியது. இந்த நிகழ்விற்கு தமிழ்நாட்டின் பாஜக தலைகள் சென்ற நிலையில், இவருக்கு மட்டும் அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிகழ்ச்சி காயத்ரி இருக்கும் துறைக்கு தொடர்பான நிகழ்ச்சி என்றாலும் அவரை அழைக்கவில்லை.

மோதல்
இதை பற்றி காயத்ரி இணையத்தில் வருத்தம் தெரிவித்த நிலையில்தான், அதற்கு அண்ணாமலை ஆதரவு நிர்வாகிகள் காட்டமாக பதில் அளித்தனர். சில ட்விட்டர் ஐடிக்கள் காயத்ரியை கடுமையாக விமர்சனம் செய்தது. இதையடுத்து இந்த ஐடிகளுக்கு பின் பாஜக நிர்வாகி செல்வகுமார் மற்றும் கும்பல் இருப்பதாக காயத்ரி குற்றச்சாட்டு வைத்தார். அதோடு நிற்காமல், அண்ணாமலை பெயரை குறிப்பிடாமல் சில விமர்சனங்களையும் வைத்தார். இந்த நிலையில்தான் நேற்று திருச்சி சூர்யா பாஜக நிர்வாகி டெய்சி சரண் என்ற பெண்ணிடம் பேசுவதாக கூறப்படும் ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து திருச்சி சிவா பேசுவதாக வெளியான ஆடியோ குறித்தும் காயத்ரி குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

என்ன புகார்
அதில், பெண்களை குறிவைத்து தவறாக பேசினால் நாக்கு வெட்டப்படும் என உறுதியளித்துள்ளார். இப்படிப்பட்ட சமயங்களில் சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு. பொது இடத்தில் அழுக்குத் துணிகளை துவைக்கிறோம் என்று சொல்கிறார்கள் செ & கோ ட்ரோல்ஸ். ஆனால் சில மற்ற கட்சிகளில் இருந்து புதிதாக இணைந்தவர்களும், சில ஜால்ரா ஆதரவாளர்களும் ஆபத்தானவர்கள் என்பதை உணரவில்லை. எல்லாவற்றையும் விட்டுவிட்டு நம்மை ட்ரோல் செய்கிறார்கள் வார் ரூம், செல்வா & கோ. புகார் எழுந்தபோது என்ன நடந்தது? நான் கோபமாக இருக்கிறேன். களப்பணி இல்லாமல் சிலர் ஜால்ரா மட்டும் செய்தால் இதுதான் நடக்கும். திருச்சி சூர்யா & கோ அல்லது செல்வா & கோ மீண்டும் எங்களை ட்ரோல் செய்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். சைக்கோ மூளையால் மட்டுமே முடியும். என் இரத்தம் கொதிக்கிறது. கட்சியை குறை சொல்ல வேண்டாம் என்பது என் தாழ்மையான வேண்டுகோள், என்று குறிப்பிட்டார்.

குற்றச்சாட்டு
இந்த நிலையில்தான் தமிழ்நாடு பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார் காயத்ரி ரகுராம். கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் இது பற்றி தேசிய தலைமையிடம் பேசுவேன் என்று காயத்ரி குறிப்பிட்டு உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த அவர், தேசிய தலைமையிடம் இதை பற்றி பேசுவேன். இதற்காக அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு இருக்கிறேன். காசி தமிழ் சங்க மீட்டிங்கிற்கு என்னை கூப்பிடவில்லை. அந்த கமிட்டியில் நான் இருக்கிறேன்.

என்ன சொன்னார்?
அது என்னுடைய துறை தொடர்பானது. ஆனாலும் கூட என்னை அழைக்கவில்லை. அந்த டீமில் இருந்தவர்களை யார் கூப்பிட வேண்டுமோ அவர்கள் கூப்பிடவில்லை. என்னிடம் ரீசனே சொல்லாமல் நடவடிக்கை எடுத்துள்ளார். பாஜகவிற்கு எதிராக இருக்கிறேன் என்று என்னை யார் கூறினாலும், அவர்களுக்கு எதிராக நான் இருப்பேன், அண்ணாமலையாக் இருந்தாலும் எதிராக இருப்பேன், என்று கூறியுள்ளார். முன்னதாக காசியில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி எல்லோரின் பெயரையும் குறிப்பிட்டு மேடையில் பேசினார். எல் முருகன், இளையராஜா தொடங்கி பலரின் பெயரை சொன்னவர் அண்ணாமலை பெயரை குறிப்பிடவில்லை. மோடி அண்ணாமலை பெயரை கூட கூறாத நிலையில் காயத்ரி அண்ணாமலைக்கு எதிராக டெல்லியில் புகார் கொடுக்க உள்ளது கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications