ஆன்மீகத்தின் பெயரால் அவதூறு பரப்புகிறார்கள்.. திமுக ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது: ஸ்டாலின் அதிரடி
தமிழக மக்களுக்காக என் சக்தியையும் மீறி உழைப்பேன். கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றுவேன் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். திராவிட மாடல் யாரையும் பிரிக்காது அரவணைக்கும் என்றும் முதல்வர் கூறியுள்ளார். இயற்கையின் ஆசி அரசுசுக்கு இருப்பதால்தான் முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டதாகவும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு அதிக நீர்வரத்து உள்ளது. 24.05.2022 நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 117.760 அடியாகவும் நீர் இருப்பு 89.942 டிஎம்சி அடியாகவும் உள்ளது. அதிக நீர்வரத்து தொடர்வதால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே. காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுப்படிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் தண்ணீர் திறந்து விட்டார்.
லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தயார்..காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்ட 3 குழுக்கள் அமைத்த சோனியா
சேலம் ஆத்தூரில் நடக்கும் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றியை சேலம் அளித்துள்ளது. தொடர்ந்து வெற்றிகளை பெறுவோம் என்ற நம்பிக்கையை இந்த கூட்டம் மெய்ப்பிக்கிறது.
ஒளிரும் சூரியன்
இருண்டு கிடந்த தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மே 7ம் தேதி ஒளிரும் சூரியனாக திமுக ஆட்சி அமைந்தது. இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. நிதி நெருக்கடியில் இருந்த தமிழ்நாடு இப்போது மீண்டு வந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை தலைசிறந்த மாநிலமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.
கொடுக்காத வாக்குறுதி
மேட்டூர் அணை திறப்பின் மூலம் 5 லட்சத்து 21 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு மிகச் சரியாக ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. மே மாதத்தில் மேட்டூர் அணை திறப்பது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. பாசன கால்வாய்களை சரியாக தூர்வாரியதால் கடைமடை வரை தண்ணீர் பாய்ந்தது. அதிமுக ஆட்சியில் 2020 தவிர ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது இல்லை.
இதன் மூலம் தேர்தல் அறிக்கையில் கொடுக்காத வாக்குறுதிகளையும் நாம் நிறைவேற்றியுள்ளோம்.
மனுக்களுக்கு தீர்வு
மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் பணவீக்கம் குறைந்துள்ளது. 10 ஆண்டுகளில் செய்யக்கூடிய சாதனைகளை ஓராண்டில் செய்திருக்கிறோம். தேர்தலுக்கு முன்னாள் மக்களிடம் பெற்ற மனுக்களில் 2.5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் திமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. ரூ.2,500 கோடி மதிப்பிலான திருக்கோயில் சொத்துக்கள் திமுக ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 7,01,000 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
திமுக அரசை ஒன்றும் செய்ய முடியாது
கூட்டுறவு வங்கிகளில் 438 கோடி ரூபாய் அளவிற்கு நகைக் கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. அறநிலையத்துறை சார்பில் 10 கலைக்கல்லூரிகள் உருவாக உள்ளன. ரூ.2,500 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் திமுக ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளது. உண்மையான ஆன்மிகவாதிகள் திமுகவை ஆதரிக்க வேண்டும். ஆன்மீகத்தின் பெயரால் திமுக ஆட்சி மீது சிலர் குறை சொல்லத் தொடங்கியுள்ளனர். ஆட்சி மீது குறை சொல்வதற்கு ஏதுவும் இல்லாத காரணத்தால் ஆன்மீகத்தை கையில் எடுத்துள்ளனர். ஆன்மீகத்தின் பெயரால் ஆட்சி மீது அவதூறு பரப்புகின்றனர். எத்தனை விஷ பரப்புரை செய்தாலும் திமுக அரசை ஒன்றும் செய்ய முடியாது.
வரியை குறைக்க வேண்டும்
திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என அறிவித்தபோது, இதற்கு வாய்ப்பே இல்லை என்றார்கள். ஆட்சிக்கு வந்த உடனே பெட்ரோல் விலையை குறைத்தது திமுக அரசு. மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை குறைக்கும் போது, மாநில வரியும் குறையும். 2014ல் இருந்த நிலைக்கு மீண்டும் பெட்ரோல், டீசல் மீதான வரியை கொண்டுவர வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான வரியை மேலும் குறைக்க வேண்டும்.
அதிமுக அரசின் சாதனை என்ன
3 மடங்குக்கு மேல் உயர்த்திவிட்டு சிறிதளவு மட்டுமே மத்திய அரசு குறைத்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பொருளாதார நெருக்கடியை ஒன்றிய அரசு ஏற்படுத்துகிறது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, கொடநாடு கொலை ஆகியவை தான் அதிமுக ஆட்சியின் சாதனை. சேலம் மாவட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி எதுவுமே செய்யவில்லை.
சக்தியை மீறி உழைப்பேன்
திராவிட மாடல் யாரையும் பிரிக்காது... அரவணைக்கும். திராவிட மாடல் எதையும் இடிக்காது ஒன்று சேர்க்கும் என்றும் கூறினார். இது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல இனத்தின் ஆட்சி என்றும் கூறினார். ஆட்சி என்பது அனைவருக்கும் பொதுவானது. இந்து சமய அறநிலையத்துறையையும் உள்ளடக்கியது என்றும் முதல்வர் கூறியுள்ளார். திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை மக்கள் மறந்தாலும் நான் மறக்கமாட்டேன். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எனது சக்தியையும் மீறி நான் உழைப்பேன் இது அண்ணாவின் மீது ஆணை என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.