நீட் தேர்வு விஷயத்தில் மக்களை ஏமாற்றமாட்டேன்.. என்ன கேலி வந்தாலும் சரி நான் நிற்பேன்: உதயநிதி உறுதி!
சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை ஏமாற்றமாட்டேன். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதில் உறுதியோடு இருப்பேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் நீட் தேர்வை கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் எங்களுக்குத் தெரியும் என உதயநிதி பேசியிருந்தார். ஆட்சிக்கு வந்தபிறகும், நீட் தேர்வு ரத்து செய்யப்படாத நிலையில், எதிர்க்கட்சிகள் உதயநிதியிடம் கேள்வி எழுப்பின. நீட் தேர்வு ரத்தாகும் வரை சட்டப் போராட்டம் நடத்துவது தான் நான் சொன்ன நீட் தேர்வின் ரகசியம் என்று கூறினார் உதயநிதி ஸ்டாலின்.

இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசு மற்றும் பொறுப்பற்ற தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும் வரும் 20ஆம் தேதி அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள மற்ற மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "தேர்தல் பிரச்சாரத்தின்போது நீட் தேர்வை ரத்து செய்வோம் என உறுதி கொடுத்தேன், உண்மைதான். நீட் தேர்வை ரத்து செய்யும் முழு பொறுப்பையும் நான் உணர்கிறேன். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.
நீட் தொடர்பாக கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பேன். மக்களை ஏமாற்ற மாட்டேன். என்ன விமர்சனம் வந்தாலும் கேலிகள், கிண்டல்கள் வந்தாலும் சரி, அமைச்சர்களும், நானும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம், நான் எப்போதும் மாணவர்களின் பக்கம் நிற்பேன். நீட் பிரச்சனை மக்கள் போராட்டமாக மாற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications