அரசியல் கேள்வி எழுப்பினால் சிலருக்கு கோபம் வருது! பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்.. கோபி நயினார்
சென்னை: அறம் என்ற திரைப்படத்தின் கதைக்காக எனக்கு விருது வழங்கி கொண்டாடிய திராவிடர் கழகம், நிஜ வாழ்வில் அதனை நடைமுறைப்படுத்தும் போது என்னை இந்த சமூகத்தின் எதிரியாக சித்தரிக்கிறது என்று இயக்குனர் கோபி நயினார் கூறியுள்ளார். மேலும் தனக்கு அளிக்கப்பட்ட பெரியார் விருதை திருப்பி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் திரைப்படத்தை இயக்கிவர் கோபி நயினார். இந்த படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். மேலும் அறம் படத்திற்காக அவருக்கு பெரியார் விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. கோபி நயினார் தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் மனுசி என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் பகுதியில் வசித்து வரும் கோபி நயினார் அப்பகுதியில் நில உரிமை தொடர்பாக பல்வேறு போராட்டங்களை செய்து வருகிறார். அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மக்களோடு போராட்டம் செய்து வருகிறார். இதேபோன்று பழவேற்காடு பகுதியில் குவாரி அமைப்பதற்காக நிலம் தோண்டும் பணிக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவாக கோபி நயினாரும் போராடினார். இந்த நிலையில் திடீரென தனக்கு அளித்த பெரியார் விருதை திருப்பி அளிப்பதாக கோபி நயினார் கூறியுள்ளார்.
நிஜ வாழ்வில் எதிரியாக சித்தரிக்கிறது
என்றும் பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் போராட்ட உணர்வோடு என்று ட்வீட் பதிவிட்டுள்ள கோபி நயினார் கூறியிருப்பதாவது:- நான் அறம் என்கிற திரைப்படத்தை இயக்கினேன். அத்திரைப்படத்தை கருத்து என்னவென்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு துயரமென்றால் இந்த அரசு எதுவும் செய்யாது என்பதே. அதற்காக தான் திராவிடர் கழகம் என்னை பாராட்டி தந்தை பெரியார் விருது வழங்கியது. நிகழ்காலத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் போராட்டங்களை முன்னெடுக்கும் போது இந்த செயல் என்னை அவமானப்படுத்துகிறது.
அறம் என்ற கதைக்கு விருது வழங்கி கொண்டாடிய திராவிடர் கழகம் நிஜ வாழ்வில் நடைமுறைப்படுத்தும் போது என்னை இந்த சமூகத்தின் எதிரியாக சித்திரிக்கிறது. இது போன்ற காரணுங்களுக்காக அறம் திரைப்படத்திற்காக திராவிடர் கழகம் எனக்கு வழங்கிய பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்.
பொதுவெளியில் இழிவுபடுத்தப்பட்டேன்
தலித் மக்களுக்கு குடிமனை கேட்டும் அவர்களின் வாழ்நிலங்களில் மண் அள்ளுவதை தடுக்க கோரியும் போராடியதற்காக பெரியாரிய சிந்தனையாளர்களால் நான் மிகவும் கேவலமாக பொதுவெளியில் இழிவுபடுத்தப்படுகிறேன். தன்னை ஜனநாயக அமைப்பு என்று கூறிக்கொள்கின்ற ஒரு அமைப்பை எதிர்த்து ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பினால் சர்வாதிகார மனநிலையோடு அது என்னை எதிர்கொள்கிறது. இத்தகைய சூழலில் இந்த சர்வாதிகார மனநிலை கொண்டவர்களின் மத்தியில் வாழ்வதற்கே எனக்கு அச்சமூட்டுகிறது
சர்வாதிகார போக்கின் மனநிலை
தமிழகம் முழுவதும் தலித் மக்களின் நிலை இது தான் என்று நம்புகிறேன். தமிழ்நாட்டில் ஒரு தலித் ஒரு ஜனநாயக சிந்தனையோடு அரசியல் கேள்விகளை எழுப்புவது பெரியாரிய சிந்தனையாளர்களுக்கு, திராவிட சிந்தாந்தவாதிகளுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு சர்வாதிகார போக்கின் மனநிலை
இந்த சூழலில் இன்று கடுமையாக அவமதிக்கப்படுகிற நான் எதிர்காலத்தில் இவர்களால் கொல்லப்படவும் நேரிடலாம். இந்திய முழுக்க நடக்கின்ற அறிவுஜீவிகளின் சமூக செயற்பாட்டாளர்கள் கலைஞர்கள் மீது நடந்த படுகொலைக்கும், எதிர்காலத்தில் எனக்கு நிகழ போகும் படுகொலைக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications