நான் ‘ஸ்டண்ட்’ பண்னல.. ஸ்லிப் ஆகி விழுந்துட்டேன்.. விழும்போது வண்டி தூக்கிடுச்சு.. டிடிஎப் வாசன்
சென்னை: பைக் ரேசர் வாசனை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், ஸ்டண்ட் எதுவும் செய்யவில்லை என்றும் கீழே விழும் போது வண்டி தூக்கியதாகவும் டிடிஎப் வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியுள்ளார்.
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன். பைக்கில் அதிவேகத்துடன் செல்வதோடு சாலைவிதிகளை மதிக்காலம் பைக்கில் சாகசம் செய்து யுடியூப்பில் வீடியோ பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், டிடிஎப் வாசன், நேற்று முன் தினம் விலை உயர்ந்த தனது பைக்கில் சென்னையில் இருந்து மராட்டிய மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவர் பைக்கில் அதிவேகமாக சென்றதாக தெரிகிறது.

சரியா சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, காஞ்சீபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் பகுதியில் அதிவேகமாக சென்ற அவர், முன்னால் சென்ற காரை முந்திச்செல்ல முயன்றபோது தனது பைக்கில் வீலீங் செய்தார். அப்போது பைக் தடுமாறி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் வாசன் தூக்கி வீசப்பட்டார் பைக் பலமுறை உருண்டது.
இதில் டிடிஎப் வாசன் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினார். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிகிறது. மோட்டார் வாகன சட்டப்படி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாக வாசன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மேலும் வாசன் வீலிங் செய்த போது அவ்வழியாக நிறைய வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. ஒரு வேளை வாசனின் விபத்து அவர்களது வாகனத்திலும் இடித்து அதில் பயணித்தவர்களுக்கு உயிர் சேதத்தையோ காயங்களையோ ஏற்படுத்தியிருந்தால் என்ன செய்வது என பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். நேற்றைய தினம் டிடிஎஃப் வாசன் மீது பாலுசெட்டிசத்திரம் போலீஸார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குகளை பதிவு செய்தனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் போலீஸாரும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதுவும் வாசன் ஜாமீனில் கூட வெளியே வர முடியாத அளவுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளியே வர முடியாத அளவுக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என மோட்டார் வாகன போக்குவரத்துக்கு தமிழக காவல் துறை பரிந்துரை செய்துள்ள நிலையில் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள டிடிஎப் வாசன், ஸ்டண்ட் எதுவும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிடிஎப் வாசன் கூறுகையில், தெரியாமல் நடந்த சின்ன விபத்துதான்.. அந்த விபத்தே நடந்து இருக்க தேவையில்லை. சின்ன ஸ்லிப் ஆகி கீழே விழுந்துட்டேன்.. நான் ஸ்டண்ட் பண்ணும் போது விழல.. விழும் போது ஆட்டோமெட்டிக்கா வண்டி தூக்கிடுச்சு" என்றார்.












Click it and Unblock the Notifications