தங்க நகை கடன்... வங்கி அதிகாரிகள் நினைத்தால் மக்களை கஷ்டப்படாமல் தப்பிக்க வைக்க முடியும்.. அது என்ன?
சென்னை: தங்கம் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில் தங்க நகை அடகு வைக்க செல்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் தற்போது அதிகமாகி வருகின்றன. தங்க நகை அடகில் முறைகேடுகளை தடுக்கும் வண்ணம், ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளுக்கும் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தங்க நகை அடகு வைத்தால் வட்டி மட்டுமின்றி, முழு தொகையை ஆண்டின் இறுதியில் கட்ட வேண்டிய நிலை உள்ளது. அதேநேரம் வங்கி அதிகாரிகள் நினைத்தால் மக்களை கஷ்டப்படாமல் தப்பிக்க வைக்க முடியும்.. அதுபற்றி பார்ப்போம்.
தங்க நகைகளின் மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் அப்படியே இரு மடங்காக உயர்ந்துள்ளது. இன்றைக்கு ஒரு பவுன் தங்கம் வாங்க குறைந்தது 72 ஆயிரம் ரூபாய் (செய்கூலி, சோதாரம் எல்லாம் சேர்த்து) எடுத்து வைக்க வேண்டும். தங்க நகை ஒரு பவுன் 66 ஆயிரத்தை தொட்டுவிட்டது. தங்க நகையின் மதிப்பு உயருவதை போல், தங்க நகை அடகின் மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

வெறும் 3000 ஆக கிராம் தங்க நகை அடகு மதிப்பு, தற்போது 5600 ரூபாய் அளவிற்கு உள்ளது. இது தனியார் இன்னும் கூடுதலாகவே உள்ளது. தங்க நகையை அடகு வைத்து கடன் பெறுவது என்பது இந்தியா முழுவதும் உள்ள மிக எளியவர்களின் ஒரே நம்பிக்கை. தங்க நகையை அடகு வைத்து பணம் திரட்டி, தொழில் தொடங்குவது, வீடு வாங்குவது., புதிதாக நகை வாங்குவது, மருத்துவ செலவு, கல்யாண செலவு, வீடு புதுப்பிக்கும் செலவு, குழந்தைகளை படிக்க வைக்க, உயர்கல்வி என அனைத்து தேவைக்கும் அருமருந்தாக தங்க நகைகள் உள்ளன.
தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற முக்கிய காரணம்.. வங்கிகளில் வட்டி குறைவு. அடுத்ததாக தேவைப்படும் போது எளிதாக பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடத்திற்கு பிறகோ வட்டியை கட்டி மெல்ல மெல்ல பணம் கட்டி நகையை திருப்பிவிட முடியும்.
அதேபோல் வங்கிகளுக்கு நகை கடன் தருவது தான் மிகவும் பாதுகாப்பானது. நன்றாக வங்கிகள் சம்பாதிக்கும் வழி நகைக்கடன் தான். நகைக்கடன் வாங்கியவர்கள் பெரும்பாலும் திருப்பிவிடுவார்கள். அதேநேரம் கொஞ்சம் தாமதமும் ஆவது உண்டு. அதன் மூலம் அதிக வட்டி கிடைப்பதால் வங்கிகளுக்கு லாபம் ஆகும்.
பொதுவாக நகைக்கடன் வாங்கியவர்கள் நகைகளுக்கான வட்டியை மட்டும் ஆண்டு இறுதியில் கட்டிவிட்டு, மறு அடகு வைத்துவிட்டு செல்வார்கள்.. ஆனால் ரிசர்வ் வங்கியின் புதிய வழிமுறைகளின் படி, நகையை அடகு வைத்தால் கடைசி நாளில் வட்டியை மட்டும் கட்டி திருப்பி மறு அடகு வைக்க முடியாது. நகைக்கான முழு பணத்தையும் கட்டிவிட்டு மறுநாள் தான், அவரது பெயரிலேயே மீண்டும் நகையை அடகு வைக்க முடியும்.இந்த விதிமுறை காரணமாக, நகை அடகு வைக்கும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் வங்கி அதிகாரிகள் நினைத்தால் இந்த பிரச்சனையில் இருந்து மக்களை தப்பிக்க வைக்க முடியும் என்கிறார்கள். கூடுதலாக நகையின் பெயரில் பணம் வாங்கி மறு அடகு வைத்துவிட முடியும். அதேபோல் நகை அடகு வைத்தவர்களின் அசலுடன் முழு பணத்தையும் பெற்றுக் கொண்டது போல் வரவு வைத்து, வேறு ஒருவரின் பெயரில் கடன் வாங்கியது போல் செய்து கொடுத்து மக்களின் சிரமத்தை போக்க முடியும் என்கிறார்கள் சில பெயர் குறிப்பிட விரும்பாத வங்கி ஊழியர்கள்.
பொதுவாகவே நகை அடகு வைப்பவர்கள் மாதம், மாதம் வட்டி மற்றும் குறிப்பிட்ட அளவு அசலையும் கட்டி வந்தால், ஆண்டு இறுதியில் இதுபோல் சிக்கல்கள் வராது என்றும் கூடுதலாக பணம் வாங்கி டாப்அப் செய்து கொண்டு சிக்கல்களில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் சில வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications