அதிமுக பிளவால் 2024 தேர்தலில் பாஜக தனித்துப் போட்டி? “திமுக ரெடியா?” - அண்ணாமலை சொன்ன ‘பளிச்’ பதில்!
சென்னை : தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியா, மூன்றாவது பெரிய கட்சியா என்பதெல்லாம் எங்களுக்கு தேவையே இல்லை, எங்கள் இலக்கே தமிழகத்தில் ஆட்சி அமைப்பதுதான் எனத் தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
'மாலை மலர்' நாளிதழுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். அதில், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி, அதிமுக மோதல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்துப் பேசியுள்ளார் அண்ணாமலை.
இந்தப் பேட்டியில் பேசியுள்ள அண்ணாமலை, திமுக தனித்துப் போட்டியிட்டால் நாங்களும் தனித்து அவர்களை எதிர்க்கொள்ளத் தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக பிரியுமா என்ற கேள்விக்கு கூட்டணி முடிவுகளை எங்கள் தேசிய தலைமை தான் முடிவு செய்யும் எனப் பதில் அளித்துள்ளார் அண்ணாமலை.

அதிமுக பிளவு
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு பாஜகவுக்கு சாதகமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள அண்ணாமலை, பாஜக எப்போதுமே மற்ற கட்சியின் பிரச்சனைகளில் தலையிடாது. தமிழகத்தை பல காலம் ஆண்ட கட்சியான அதிமுக பலமாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் நினைக்கிறோம். அக்கட்சியில் ஏற்பட்டுள்ல பிளவை எங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள எப்போதும் நினைத்ததில்லை. இளைஞர்கள் திரள் பாஜகவுக்கு ஆதரவளித்து வருகிறது. அதிமுக சூழலை நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

கூட்டணி மாற்றம்?
2024 நாடாளுமன்றத்தில் கூட்டணி மாற்றம் நடக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக உள்ளது. எங்கள் சிந்தனையெல்லாம் பாஜகவின் வளர்ச்சியைப் பற்றித்தான் உள்ளது. அதிமுக உட்கட்சி பிரச்சனைகளில் நாங்கள் தலையிட மாட்டோம். கூட்டணி முடிவுகளை எங்கள் தேசிய தலைமை தான் முடிவு செய்யும், பாஜகவை மாநிலத்தில் வலுப்படுத்துவது மட்டுமே எங்கள் குறிக்கோள் எனத் தெரிவித்துள்ளார்.

தனித்துப் போட்டி
பாஜகவால் கூட்டணி அமைக்காமல் போட்டியிட்டு சாதிக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, கூட்டணி இல்லாமல் தி.மு.க தேர்தலை சந்திக்குமா? 70 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் தி.மு.கவுக்கே கூட்டணி தேவைப்படுகிறது. அது அவர்களின் பலவீனத்தின் வெளிப்பாடு. தமிழகத்தில் பா.ஜ.க வேகமாக வளர்ந்து வருகிறது. திமுக தனித்துப் போட்டியிட முன்வந்தால், அவர்களை தனியாக எதிர்கொள்ள நாங்கள் காத்திருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

25 எம்.பிக்கள்
2024 தேர்தலில் உங்கள் லட்சியம் என்ன என்ற கேள்விக்கு, இதற்கு முன் பல மேடைகளில் சொன்னது போல, குறைந்தபட்சம் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழகத்திலிருந்து டெல்லிக்கு அனுப்புவதே எங்கள் லட்சியம் எனப் பதில் அளித்துள்ளார் அண்ணாமலை. மேலும், நாடு முழுவதும் எதிர்கட்சிகளை பலவீனப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறதே எனும் கேள்விக்கு, அவர்களின் ஊழலை மக்கள் மன்றத்தில் நாங்கள் வைப்பது அவர்களை பலவீனப்படுத்தினால் அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும் எனப் பதில் கூறியுள்ளார் அண்ணாமலை.

தமிழகத்தில் பாஜக வளர்ச்சி
தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, கடந்த 8 ஆண்டுகால மோடி ஆட்சியில் மத்திய அரசின் நலத்திட்டங்களால் தமிழகத்தில் 4 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். ஆனால் இங்கு பொய்களை மட்டுமே வைத்து அரசியல் பிழைப்பு நடத்தி வரும் பலர், பல கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு இந்த சாதனைகளை இருட்டடிப்பு செய்ய முயற்சித்தனர். அவை பொய்கள் என மக்களுக்குப் புரிய தொடங்கிவிட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக முன்னேறியது. மக்கள் பாஜகவை ஆதரிக்கத் தொடங்கிவிட்டதற்கான சான்று இது எனத் தெரிவித்துள்ளார்.
Recommended Video

பாஜக இரண்டாவது பெரிய கட்சியா?
பாஜக தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியா, மூன்றாவது பெரிய கட்சியா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள அண்ணாமலை, இன்றைக்கு தமிழகத்தில் மக்களின் குரலாக ஒலிப்பது பா.ஜ.க தான். மத்திய அரசின் திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, மாநில அரசின் தவறுகளை சுட்டி காட்டுவது என தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம். மக்களும் இதைத் தான் எங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். இரண்டாவது பெரிய கட்சியாக இருப்பது எங்கள் இலக்கல்ல. தமிழகத்தில் மக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதே எங்கள் இலக்கு எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications