ரஜினி மனசில் இருந்தது யாரா இருக்கும்.. போற போக்கில் குண்டைப் போட்டுட்டுப் போயிட்டாரே!
சென்னை: மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடவும் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்தும் முடிவு செய்திருந்ததாக ரஜினி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து ரஜினி நினைத்திருந்த கூட்டணி எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனை கொடி கட்டிப் பறக்கிறது. ரஜினிகாந்த் அமெரிக்காவில் மருத்துவப் பரிசோதனை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய நிலையில் நேற்றைய தினம் ரஜினி மக்கள் மன்றத்தினரை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் மன்ற நிர்வாகிகளிடம் நிறைய விஷயங்களை பேசியதாக தகவல்கள் வருகின்றன. அந்த கூட்டத்தில், "கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிருந்தால் நாம் நிச்சயம் ஆட்சியை பிடித்திருந்திருப்போம்" என தெரிவித்திருந்தாராம்.

கூட்டணி ரஜினி
அது போல் இந்த கூட்டத்தில் ரஜினி கூட்டணி குறித்தும் பேசியதாக தெரிகிறது. அதாவது "சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதெல்லாம் முடிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் இந்த கொரோனாவால் எதையும் செய்ய முடியாமல் போயிற்று" என மாவட்ட செயலாளர்களிடம் தெரிவித்தாராம்.

கொரோனா வராமல்
ஒரு வேளை இந்த கொரோனா 2021 மே மாதத்திற்கு மேல் உலக நாடுகளில் பரவி, ரஜினியும் அரசியல் கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிட்டிருந்தால் அவர் யாருடன் கூட்டணி வைத்திருந்திருப்பார், ரஜினியின் மனதில் இடம் பிடித்திருந்த அந்த கூட்டணி கட்சிகள் எப்படி இருந்திருக்கும் என்ற விவாதம் கிளம்பியுள்ளது.

ரஜினி- கமல்
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் திரைப்பட பாணி வெவ்வேறு பாதையை நோக்கியதாக இருந்தாலும் அரசியலை பொருத்தவரை கொள்கை வேறாக இருந்தாலும் இருவரது லட்சியமும் ஒன்றுதான். கமல் அரசியல் கட்சியை தொடங்கியதுமே ரஜினியை தன்னுடன் பயணிக்குமாறு அழைத்திருந்தார்.

ஆதரவு
அது போல் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் ரஜினியை சந்தித்து கமல் ஆதரவு கேட்டிருந்தார். எனவே ரஜினி, கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி வைக்க முடிவு செய்திருக்கலாம். அது போல் ரஜினி விரும்பும் இன்னொரு அரசியல் தலைவர் விஜயகாந்த், சினிமா காலத்திலும் சரி, நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் இருந்த போதிலும் அவர் மீது ரஜினிக்கு மிகவும் பிரியம்.

நடிகர் சங்கத் தலைவர்
சினிமா துறையிலும் நடிகர் சங்கத் தலைவராக இருந்த போதிலும் விஜயகாந்த் நலிந்த கலைஞர்களுக்கு உதவியதை ரஜினி அறிவார். அத்துடன் அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஏழை எளிய மக்களுக்கு விஜயகாந்த் நிறைய உதவிகளை செய்துள்ளார். விஜயகாந்த் இப்படி செய்தார், அப்படி செய்தார் என யாரும் சொன்னதில்லை.

கமல்ஹாசன்
விஜயகாந்தும், கமல்ஹாசனும் ஊழல் கறைபடியாதவர்கள் என்பது ரஜினிக்கு தெரியும். இதுவரை அவர்கள் மீது எந்தவித புகார்களும் வந்ததில்லை. இருவருமே மிகவும் தைரியசாலிகள், ஒரு அரசை எதிர்த்து தட்டி கேட்பவர்கள், அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்து எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் விஜயகாந்த், அதிமுக அரசை எப்படி கையாண்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.

விஜயகாந்த்
நல்ல உடல்நலத்துடன் விஜயகாந்த் இருந்திருந்தால் இன்று அரசியலில் எப்படியிருந்திருப்பார் என்பது பொதுமக்களை போல் ரஜினிக்கும் தெரியும். எனவே ரஜினியின் கூட்டணி சாய்ஸ் கமல்ஹாசன் + விஜயகாந்தாக இருந்திருக்கலாம். இல்லாவிட்டால் விஜயகாந்துடன் கூட்டணி அமைத்திருக்கலாம்.

ரஜினி
அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கூட ரஜினியுடன் இணைந்திருக்க வாய்ப்பு உண்டு. அதாவது பாஜக அல்லாமல் ரஜினி கூட்டணி அமைத்திருந்தால் நிச்சயம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் உடன் பயணித்திருக்க வாய்ப்பு உள்ளது. காரணம், திருமாவளவனும், ரஜினியும் கூடிப் பேசியதாக பலமுறை செய்திகள் வந்திருந்தன அப்போது என்பதால்.

கூட்டணி
எப்படியோ இப்போது ரஜினியின் அரசியல் இல்லை என்றாகி விட்டது. எனவே அவரது கூட்டணி குறித்த அந்த ஆர்வம் பெரிதாக எடுபடாமல் போய் விட்டது. ஒரு வேளை இதுதான் கூட்டணி , இதைத்தான் யோசித்திருந்தேன் என்று ரஜினி வெளிப்படையாக கூறியிருந்தால் தற்போதைய அரசியலில் ஒரு பூகம்பமே கூட ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. ரஜினி ரசிகர்கள் அதை மிஸ் செய்து விட்டனர்.












Click it and Unblock the Notifications