உடலில் தமிழ் உணர்ச்சி இருந்திருந்தால்.. அதிமுகவினர் இப்படி செய்திருப்பார்களா? துரைமுருகன் விளாசல்!
சென்னை: உடலில் தமிழ் உணர்ச்சி இருக்குமேயானால் இந்தி எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வரும் போது சட்டசபையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருக்க மாட்டார்கள் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
உடலில் தன்மான ரத்தம் ஓடுமேயானால் இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிப்பதற்காக அதிமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்திருப்பார்கள் எனவும் அவர் கூறினார்.
மத்திய அரசுக்கு எதிரான இந்தி எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்ட வேளையில் அதிமுக உறுப்பினர்கள் அமளி துமளியில் ஈடுபட்டு சபையிலிருந்து வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

வரலாற்று முக்கியத்துவம்
தமிழக சட்டசபையில் தமிழகத்தையே உலுக்கும் வகையில் இரண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல் இந்தி எதிர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த பல நிகழ்வுகள் இன்றைய தினம் சட்டசபையில் நடைபெற்ற நிலையில் அதிமுக இருக்கை விவகாரத்தை காரணம் கூறி அமளி துமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தது.

உடலில் தமிழ் உணர்ச்சி
இந்நிலையில் இது குறித்து தனது வேதனையையும், ஆதங்கத்தையும் பகிர்ந்துகொண்ட அமைச்சர் துரைமுருகன், உடலில் தமிழ் உணர்ச்சி இருக்குமேயானால் இந்தி எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வரும் போது சட்டசபையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருக்க மாட்டார்கள் என்றும் உடலில் தன்மான ரத்தம் ஓடுமேயானால் இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரித்திருப்பார்கள் எனவும் மிக கடுமையாக பேசினார்.

பயந்து ஓடி
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அளித்த அறிக்கையை கண்டும், ஆறுமுகசாமி ஆணையத்தின் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையை கண்டும் அதிமுக பயந்துள்ளதாகவும், இதனால் வெளிநடப்பு செய்வது என ஏற்கனவே திட்டமிட்டு சபைக்கு வந்து நாடகத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள் எனவும் ஒரு பிடி பிடித்தார். இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை ஓ.பன்னீர்செல்வம் வழிமொழிந்து பேசியது குறிப்பிடத்தக்கது.

அதிமுக இருந்திருக்கலாம்
தமிழக சட்டசபையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விவகாரங்கள் இன்று நடைபெற்றிருக்கும் நிலையில் அதிமுக அவசியம் அங்கு இருந்திருக்க வேண்டும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. அதைவிடுத்து ஒரு இருக்கை பிரச்சனையை பூதாகரமாக்கி வெளிநடப்பு செய்தது ஏற்புடையதல்ல என்பதும் அவர்களின் கருத்தாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications