Exclusive: என்னோடது சிம்பொனியே இல்ல..ராஜா சார் சொன்னது தான் உண்மை! மனம் திறந்த லிடியன் நாதஸ்வரம்
சென்னை: இசைஞானி இசை ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இளையராஜா லண்டனில் தனது சிம்பொனியை அரங்கேற்றி இருக்கிறார். இந்த நிலையில் இளம் இசை கலைஞரான லிடியன் நாதஸ்வரம் சிம்பொனி அமைக்கப் போவதாக தகவல் வெளியான நிலையில் அவர் இசையமைத்திருப்பது சிம்பொனி இசை இல்லை என இளையராஜா பேசியது சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை பெற்றது. இந்த நிலையில் இளையராஜா சொன்னது உண்மைதான் எனவும், அது இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது என விளக்கம் அளித்து இருக்கிறார் லிடியன் நாதஸ்வரம் (Lydian Nadhaswaram).
தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மொழிகளில் 15,000 பாடல்களுக்கு மேல் இசையமைத்தவர் இளையராஜா. இசைஞானி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர். தற்போது திரையுலகில் தீவிரமாக பணியாற்றாவிட்டாலும் நீண்ட காலமாக சிம்போனி எழுதி வருவதாகவும் விரைவில் அதை அரங்கேற்றுவேன் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி லண்டனில் புகழ்பெற்ற ஈவண்டின் அப்பல்லோ அரங்கத்தில் இளையராஜாவின் சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்யப்பட்டது. அன்றிலிருந்து இப்போது வரை எங்கு பார்த்தாலும் இளையராஜாவின் சிம்பொனி குறித்த பேச்சு தான் இருக்கிறது.

இந்த நிலையில் இளையராஜாவின் சிம்பொனி இசைக்கு அவரது சிஷ்யரான லிடியன் நாதஸ்வரம் உதவியதாகவும், அவரும் ஒரு சிம்பொனி இசைக்கு தயாராகி வருவதாகவும் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளிப்பது போல இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், லிடியன் நாதஸ்வரம் தம்மிடம் இசை கற்க வந்தபோது தான் ஒரு சிம்பொனி இயற்றியுள்ளதாக 20 நொடிகள் ஓடும் ஒரு இசையை வாசித்துக் காட்டினார்.
அப்போது இது சிம்பொனி இல்லை எனவும். சினிமா பின்னணி இசை போல இருக்கிறது. இது தப்பாச்சே. இது சிம்பொனி இல்லை. முதலில் சிம்போனி என்ன என்று தெரிந்து கொள். அதற்குப் பிறகு கம்போசிங் செய் என்று சொன்னேன். சினிமா பின்னணி இசை போன்ற ஒன்றை பண்ணிவிட்டு அதை என்னிடம் ஒப்புதல் பெறுவதற்காக கொண்டு வந்தார். அதனை கற்றுக் கொள் என அவருக்கு வழி காட்டினேன்" எனக் கூறியிருந்தார்.

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் லிடியன் நாதஸ்வரம் தனது சிம்பொனி இசையை அரங்கேற்ற உள்ளதாக கூறிய நிலையில் இளையராஜாவின் பேச்சு சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இதனையடுத்து இளையராஜாவை பலரும் விமர்சித்து வருகின்றனர். தற்பெருமை பிடித்தவர் எனவும் பலர் ட்ரோல் செய்தனர்.
இந்த நிலையில் இளையராஜா சொன்னது உண்மைதான், அவர் மிகவும் நேர்மையானவர் என விளக்கம் அளித்திருக்கிறார் லிடியன் நாதஸ்வரம், "ஒன் இந்தியா தமிழுக்கு" அவர் அளித்த பிரத்யேக பேட்டியில்,"இளையராஜா எனக்கு குரு அவர் சொன்னது தான் உண்மை. நான் சிம்பொனியை போட்டு காட்டிய போது அது சிம்பொனி இல்லை. நீயும் கற்றுக்கொண்டு விருதுகள் வாங்கு எனக் கூறினார். இளையராஜா ரொம்ப நேர்மையானவர். அவர் மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் ஒன்று பேச மாட்டார்.

ஆனால் வெளியில் பார்ப்பவர்களுக்கு அவர் கோபமாக பேசுவது போல் தான் தெரியும். அவர் அப்படி இல்லை.. லண்டனுக்கு ஏன் செல்லவில்லை என பலர் கேட்கிறார்கள். நான் இப்போது திருக்குறளுக்கு இசையமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றேன். மேலும் இளையராஜா ஏற்கனவே திருவாசகத்துக்கு இசையமைத்த நிலையில் தற்கால இளைஞர்களுக்கு புரியும் வகையில் திருவாசகத்தையும் தயார் செய்து வருகிறேன்" என விளக்கம் கொடுத்துள்ளார். இதை அடுத்து இளையராஜா சொன்னது தான் சரி என பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications