'இல்லம் தேடி கல்வி' திராவிட திட்டம்.. அவங்க உள்ளே வர முடியாது.. அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்!
சென்னை: தமிழகத்தில் 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். கொரோன ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் 1 முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும் இந்த திட்டம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கமாகத்தான் இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதா? என்று தி.மு.க கூட்டணி கட்சியை சார்ந்த பலரே சந்தேகம் எழுப்பினார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
இதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விளக்கம் அளித்தார். மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை ஆய்வு செய்த கல்வியாளர்களும், யுனெஸ்கோ உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளும், தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனைக் குழுவிலுள்ள வல்லுநர்களும் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில்தான் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கல்வியாளர் அடங்கிய குழு
தன்னார்வலர்களைத் தேர்வு செய்யும் முறை, அவர்களுடைய பங்களிப்பு, அவர்களால் கற்பிக்கப்படும் மாணவ மாணவியரின் கற்றல் மேம்பாடு ஆகியவை தொடர்ந்து கல்வியாளர்கள் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படும். மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்பது ஏற்கெனவே பலமுறை தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. மேலும், மாநில அளவிலான கல்விக் கொள்கையினை வகுத்திட கல்வியாளர் அடங்கிய குழு ஒன்று விரைவில் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்தார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து சந்தேகம் எழுப்பபடுகிறேதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்கள். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது;- ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளாது என முதல்வர் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளார்.

இது திராவிட திட்டம்
மாநில அளவில் கல்வி கொள்கை உருவாக்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் தெரிவித்தார். அதற்கான உயர்மட்டக்குழு உருவாக்கப்பட்டு விரைவில் மாநிலத்திற்கான கல்வி கொள்கை உருவாக்கப்படும். இல்லம் தேடி கல்வி திட்டம் முதற்கட்டமாக இரண்டு வாரங்கள்
12 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் வரும் கருத்துக்கள் நடைமுறை சிக்கல்கள் போன்றவற்றை ஆராய்ந்து மாநிலம் முழுவதும் செயல்படுத்துவோம். இது திராவிட திட்டம் என முதல்வர் கூறியுள்ளார். இதில் எந்த அமைப்பினரும் உள்ளே வர முடியாது.

எந்த பிரச்சனையும் இருக்காது
இதற்கான தன்னார்வலர்களை தேர்ந்தெடுப்பதை கண்காணிக்க மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில், பள்ளி அளவில் என நான்கு குழுக்கள் அமைக்கப்படும். அந்த திட்டத்தை செயல்படுத்துவதில் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்கிறோம். இல்லம் தேடி கல்வி திட்டம் என்பது கடந்த இரண்டாண்டுகளாக மாணவர்கள் பள்ளியில் சென்று கற்க முடியாததை கற்றுக்கொடுக்கத்தான். இதனால் பள்ளி கல்வியில் எந்த பிரச்சனையும் இருக்காது. இதனால் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications