தேர்தலில் சீட்... எதிர்பார்ப்பில் இருந்த அமமுக மகளிர் நிர்வாகிகள்... கைவிரித்த டிடிவி தினகரன்..!
சென்னை: அமமுக சார்பில் தேர்தலில் களமிறக்கப்படுவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய பெண் நிர்வாகிகள் பலருக்கும் டிடிவி தினகரன் வாய்ப்பு மறுத்திருப்பது அக்கட்சியில் பேசு பொருளாக உள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளரும் அக்கட்சியின் சீனியர் பெண் நிர்வாகியுமான சி.ஆர். சரஸ்வதி தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவரும் தனக்கு டிடிவி தினகரன் ஏதேனும் ஒரு தொகுதியை ஒதுக்கி தருவார் என நம்பிக்கையுடன் எதிர்பார்த்தார். ஆனால் கள நிலவரம் வேறுமாதிரி இருப்பதால் சி.ஆர்.எஸ்.க்கு தினகரன் வாய்ப்பு தரவில்லை எனக் காரணம் கூறப்படுகிறது.

இதேபோல் அமமுகவின் ஐ.டி.விங் நிர்வாகியான டாக்டர் ஜெமீலாவுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கவில்லை. கிறிஸ்துவ நாடார் சமுதாயத்தை சேர்ந்த இவர் ஸ்ரீ வைகுண்டம் மற்றும் ராயபுரம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட விரும்பி விருப்பமனு தாக்கல் செய்திருந்தார். அதில் ராயபுரம் தொகுதியில் எப்படியும் சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த அவருக்கு டிடிவி தினகரன் வாய்ப்பு தரவில்லை.
இதற்கு காரணம் தினகரன் எதிர்பார்த்த அளவுக்கு நிதி விவகாரத்தில் அவர் தாராளம் காட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேபோல் மற்றொரு பெண் நிர்வாகியும் அமமுகவின் இளம் பெண்கள் பாசறை செயலாளருமான கிருஷ்ணா ராதா கிருஷ்ணனுக்கும் டிடிவி தினகரன் வாய்ப்பு அளிக்கவில்லை. இவர் தூத்துக்குடி மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் என்பதால் அந்த மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட விரும்பி விருப்பமனு தாக்கல் செய்திருந்தார்.
இவருக்கு சீட் கொடுக்காததற்கு காரணம் கள அரசியலை எதிர்கொள்ள அவர் சற்று திணறுவார் எனக் காரணம் தெரிவிக்கப்படுகிறது. இந்த வரிசையில் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜும் இருக்கிறார். அவரும் மதுரை மாவட்டத்தில் தனக்கு எப்படியும் ஒரு தொகுதியை டிடிவி தந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தார். வேட்பாளராகிவிடுவோம் என்ற நம்பிக்கையில் தேர்தல் பிரச்சாரத்துக்கான வாகனங்களை கூட வாடகைக்கு சொல்லி வைத்திருந்தார்.
இப்படி அமமுகவின் தலைமைக் கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் முக்கிய நிர்வாகிகளாக இருக்கும் பெண்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இது குறித்து அமமுக தலைமை அலுவலக வட்டாரத்தில் நாம் பேசிய போது, ''சார் எதைச் செய்தாலும் அதில் காரணம் இருக்கும். அதை மேலோட்டமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அதிலுள்ள அர்த்தங்கள் புரிய வாய்ப்பில்லை. தேர்தலுக்கு பிறகு ஒரு நல்ல மாறுதல் வரும். அப்போது வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு வேறொரு வகையில் அவர் உதவுவார்'' எனத் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications