கோலாகல கொண்டாட்டம்.. தமிழகம் முழுவதும் களைகட்டிய கிறிஸ்துமஸ்..சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனை
சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, வேளாங்கண்ணி, கன்னியாகுமரி, கோவை உள்பட அனைத்து இடங்களில் நள்ளிரவு முதல் சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனை தொடங்கி நடந்து வுருகிறது.
உலகில் அதிகமானவர்கள் பின்பற்றும் மதமாக கிறிஸ்தவம் உள்ளது. நம் நாட்டிலும் கணிசமான அளவில் கிறிஸ்தவர்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நேற்று இரவே தொடங்கியது.
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தாலியின் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் போப் பிரான்ஸிஸ் தலைமையில் நள்ளிரவில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடந்தது. பேராலயத்தில் குழந்தை இயேசுவின் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த சிறப்பு பிரார்த்தனையில் பல ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
அதேபோல் தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் நேற்று இரவு முதல் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இன்று காலையிலும் புத்தாடை அணிந்து பிரார்த்தனை மேற்கொண்டனர். சென்னையில் உள்ள சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் இன்று அதிகாலை முதல் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இயேசு கிறிஸ்து பிறந்ததை பாடல் பாடி வரவேற்றனர்.
உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்திலும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக நடந்தது. பிரார்த்தனையில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். பிற தேவாலயங்களிலும் பிரார்த்தனை, திருப்பலி நடந்தது. மேலும் தென்மாவட்டங்களில் கணிசமான அளவுக்கு கிறிஸ்தவர்கள் உள்ளனர். அங்கும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட சர்ச்சுகளில் கிறிஸ்தவர்கள் ஏராளமானவர்கள் கூடி பிரார்த்தனை செய்தனர்.
இதுதவிர சேலம், நாகப்பட்டினம், கோவை உள்பட அனைத்து மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களிலும் நடந்த பிரார்த்தனை, திருப்பலிகளில் ஏராளமானவர்கள் குடும்பத்தினர்களுடன் பங்கேற்று மகிழ்ச்சியாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றன. அதோடு ஒருவருக்கொருவர் கைக்குலுக்கி கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்தை பகிர்ந்து கொண்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சர்ச்சகள் மற்றும் கிறிஸ்தவர்களி்ன வீடுகள் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஸ்டார்கள் ஒளிர செய்யப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. மேலும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் விதமாக சர்ச், வீடுகளில் குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தன. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications