மோடியை விட சித்தராமையாவிற்கு சென்னையில் உற்சாக வரவேற்பு.. பூரிக்கும் கன்னட மீடியாக்கள்!
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வழங்கப்பட்ட அம்பேத்கர் சுடர் விருது பெற சென்னை வந்த கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியை விட உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கன்னட மீடியாக்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி விருது, காமராசர் கதிர் விருது, அயோத்திதாசர் ஆதவன் விருது, காயிதேமில்த் பிறை விருது, செம்மொழி ஞாயிறு விருது, மார்க்ஸ் மாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக டுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து வரும் தலைவர்களை பாராட்டி அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 'விருதுகள் வழங்கும் விழா - 2022' இன்று சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் துவங்கி நடைபெற்று வருகிறது.
தெற்கில் கர்நாடகாவில் மட்டுமே பாஜக.. விரைவில் ஆட்சியில் இருந்து அகற்றுவோம்.. சென்னையில் சித்தராமையா!
சித்தராமையாவுக்கு விருது
இதில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி( காங்கிரஸ்) தலைவர் சித்தராமையாவுக்கு 'அம்பேத்கர் சுடர்' விருது வழங்கப்பட்டது. மேலும் பலருக்கு பிற விருதுகள் வழங்கப்பட்டது. முன்னதாக விருது வழங்கும் விழாவில் பங்கேற்க சித்தராமையா இன்று சென்னை விமான நிலையம் வந்தார். சென்னை விமான நிலையத்தில் சித்தராமையாவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவரும், எம்பியுமான தொல் திருமாவளவன், காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றனர். மேலும் அவரை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
நெகிழ்ந்த சித்தராமையா
இந்த வரவேற்பில் சித்தராமையா நெகிழ்ந்தார். இதுதொடர்பான வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். அதன்பிறகு அவர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்நிலையில் சித்தராமையாவுக்கு சென்னையில் அளிக்கப்பட்ட வரவேற்பு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கன்னட மீடியாக்களில் செய்தி
இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியை விட சித்தராமையாவிற்கு சென்னையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கன்னட மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுதொடர்பாக ராதிகா மீடியா சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் சித்தராமையாவுக்கு திருமாவளவன் வரவேற்ற வீடியோ, தமிழக முதல்வர் முக ஸ்டாலினை சித்தராமையயா சந்தித்த வீடியோ மற்றும் விமான நிலையத்தில் சித்தராமையாவுக்கு கொடுத்த உற்சாக வரவேற்பு தொடர்பான வீடியோக்களுடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
செய்தியில் இருப்பது என்ன?
மேலும் இந்த செய்தியில் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, சித்தராமையாவுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு குறித்த விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு சென்றார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் போட்டோக்கள் மீது கரி பூசிய நிலையில் தற்போது கர்நாடக முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பிரதமருக்கு கிடைக்காத கவுரவம்
அதோடு பிரதமர் மோடிக்கு கிடைக்காத கவுரவமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுத்ததாக கூறி சித்தராமையாவுக்கு தமிழகத்தில் கிடைத்துள்ளது என அந்த செய்தி கூறுகிறது. அதாவது பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக அரசியல் தலைவர்கள் யாருக்கும் கிடைக்காத அம்பேத்கர் சுடர் விருது கர்நாடக எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையாவுக்கு கிடைத்துள்ளது. இந்த விருதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவன் வழங்குகிறது என செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிட மண்ணில் கர்ஜனை
மேலும் இந்த வீடியோவில் பல இடங்களில் திராவிடர், தமிழர்கள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. சித்தராமையா தமிழர்கள் முன்பு விருது பெறுகிறார். கன்னடர், தெலுங்கர், தமிழர், மலையாளிகள் என அனைவரும் திராவிடர்களாக இருக்கும் நிலையில் திராவிட மண்ணில் நின்று சித்தராமையா விருது பெற்று கன்னடத்தில் கர்ஜனை செய்ய உள்ளார் என கூறப்பட்டுள்ளது.
நீங்கள் பார்ப்பது கர்நாடகம் இல்லை
மேலும் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் சித்தராமையாவை சுற்றி கூட்டம் கூடிய வீடியோவை வெளியிட்டு.. ‛‛நீங்கள் பார்ப்பது கர்நாடகத்தின் பாதாமி, சாமுண்டீஸ்வரி, மைசூர் பெங்களூர் இல்லை. விதானசவுதாவும் இல்லை. இது தமிழ்நாடு.. தமிழ்நாட்டில் சித்தராமையாவுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பை தான் பார்க்கின்றீர்கள்'' என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.