உங்க மாமியார் ஊர் அது! பஸ் விடுவீங்களா மாட்டிங்களா? அமைச்சர் சிவசங்கரை கோர்த்துவிட்ட ஜவாஹிருல்லா!
சென்னை: தமிழக சட்டசபையில் அமைச்சர் சிவசங்கரிடம் பேருந்து சேவை தொடர்பான கேள்வியை எழுப்பிய ஜவாஹிருல்லா அதில் அவரது மாமியார் ஊர் குறித்தும் குறிப்பிட்டு சபையை கலகலப்பாக்கினார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளன.

முன்னதாக கேள்வி நேரத்தின் போது பேசிய பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மமக தலைவருமான ஜவாஹிருல்லா, அரியலூரை பொறுத்தவரை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் சொந்த மாவட்டம் என்றும் அதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அவரது இல்லத்தரசியின் சொந்த ஊர் எனவும் குறிப்பிட்டார்.
அதாவது அமைச்சர் சிவசங்கரின் மாமியார் ஊரான பாபநாசத்துக்கும் அரியலூருக்கும் இடையே நேரடி போக்குவரத்து சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜவாஹிருல்லா முன் வைத்தார்.
சிரித்துக் கொண்டே பதிலளிக்க எழுந்த அமைச்சர் சிவசங்கர், எப்படி கேள்வி கேட்டால் எப்படி பதிலை வாங்க முடியும் என்பதை பேராசிரியர் என்பதால் ஜவாஹிருல்லா நன்கு அறிந்து வைத்திருக்கிறார் என்றார்.
தனது மனைவியின் சொந்த ஊர் என்று குறிப்பிட்டு தன்னை கோர்த்துவிட்டு விட்டீர்கள் என சிரித்த அமைச்சர் சிவசங்கர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மனது வைத்தால் பாபநாசம் -அரியலூர் இடையே நேரடி போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என்றார்.

அதாவது அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் கதவணைத் திட்டத்தில் பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கனவே தாம் அமைச்சர் துரைமுருகனிடம் வைத்திருப்பதாக கூறிய அமைச்சர் சிவசங்கர், அது நிறைவேற்றப்பட்டால் அரியலூர் -பாபநாசம் இடையே நேரடி போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனிடையே ஜவாஹிருல்லா அமைச்சரின் மாமியார் ஊர் என்று குறிப்பிட்டு தனது பாபநாசம் தொகுதிக்கு நேரடி பஸ் சேவை கேட்டதை சட்டமன்ற உறுப்பினர்கள் வேல்முருகனும், ஈஸ்வரனும் கலாய்த்தார்கள்.












Click it and Unblock the Notifications