லெஜன்ட் சரவணன் எந்த கட்சியில் இணைவார் தெரியுமா? அண்ணாச்சி பேட்டியில் இதை நோட் செய்தீர்களா?
சென்னை: லெஜன்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளரும் நடிகருமான சரவணன் அருள், அரசியலுக்கு வர போவதாக குறிப்பிட்டுள்ள நிலையில் அவர் எந்த கட்சியில் இணைவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
லெஜன்ட் சரவணன் அருள் என்பவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர். இவரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. தனது கடை விளம்பரத்திற்காக ஹன்சிகா, தமன்னாவுடன் தனது 50+ வயதில் நடனமாடி 90 ஸ் கிட்ஸ்களின் காதுகளில் புகைச்சலை வரவழைத்தவர்.

இவர் தி லெஜன்ட் எனும் படத்தில் நடித்துள்ளார். ஜேடி - ஜெர்ரி இயக்கிய இந்த படத்தில் ஊர்வசி ரவுத்தேலா, விவேக், யோகி பாபு, சுமன் , நாசர், விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனாலும் இந்த படம் சரியாக போகவில்லை.
தற்போது ஒரு ஆக்ஷன் கலந்த படத்தில் நடித்து வருவதாக தெரிவித்துள்ளார். அவர் சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: எனது அடுத்த படத்துக்கான படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடக்க இருக்கிறது. அதில் கலந்து கொள்ள நாங்கள் அங்கு சென்று கொண்டிருக்கிறோம். தூத்துக்குடியைத் தொடர்ந்து வட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும். படம் அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு திரைக்கு வரும். படத்தின் தலைப்பு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்தப் படம் ஆக்ஷன் - த்ரில்லர் கதையாக இருக்கும். எனக்கு எப்போதும் மக்கள் நலனில் அக்கறை அதிகம் உண்டு.
காலம், நேரம், சூழல் சரியாக இருந்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தல் கடும் போட்டியாக இருக்கும் என நினைக்கிறேன். என்னுடைய கொள்கைகளுக்கு உடன்படும் கட்சியில் இணைந்து செயல்படுவேன் என தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அண்ணாச்சி எந்த கட்சியில் இணைவார் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த பேட்டியிலேயே உங்கள் திராவிடக் கட்சிகளை பிடிக்குமா என கேட்டதற்கு யாருக்குத்தான் பிடிக்காது என கூறிவிட்டு வெளிநாடு சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு என வாழ்த்துகள் என தெரிவித்திருந்தார்.
எனவே லெஜன்ட் சரவணன், தனி கட்சியை தொடங்கும் வாய்ப்பில்லை. அவருக்கு திராவிட கொள்கை பிடிக்கும் என்பதால் அவர் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏன் அதிமுகவும் திராவிடக் கட்சிதானே என கேட்கலாம். ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது இருந்த ராணுவ கட்டுப்பாட்டுடன் அதிமுக இல்லை என்பதே அனைவரது கருத்தாக இருக்கிறது. எனவே வலுவான உள்ள திமுகவில் அவர் இணைய வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
வரும் 2026ஆம் ஆண்டும் திமுக கூட்டணியே தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என சொல்லப்படுகிறது. தூத்துக்குடியில் மட்டுமில்லாமல் சென்னையிலும் சரவணன் அருளுக்கு செல்வாக்கு இருக்கிறது. நாடார் சமூக வாக்குகளும் அவருக்கு கணிசமாக இருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏதாவது ஒரு எம்எல்ஏ தொகுதியில் சரவணன் அருள் போட்டியிட வாய்ப்புள்ளது.
பணம், புகழ், பெயர் இருந்தாலும் சரவணன் அருளுக்கு மனிதாபிமானமும் உதவும் குணமும் அதிகமாகவே உள்ளது. அவர் தனது வீட்டில் இன்று வரை ஏழை எளிய மக்களுக்கு 3 வேளை உணவளித்து வருகிறார். அரசியலுக்கு வர இதை விட வேறு என்ன தகுதி வேண்டும்? மேலும் இவருக்கு தொழில்துறை, சினிமா, அரசியலும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். தொழில் துறையில் துணிக் கடை, நகைக் கடை, எலக்ட்ரானிக்ஸ் கடைகளை வைத்து சாதனை படைத்துள்ளார்.
அது போல் திரைத்துறையிலும் அவருடைய திருப்திக்கேற்ப நடித்து வருகிறார். இவருடைய தந்தையான செல்வரத்தினத்தின் இறப்புக்கு பிறகு சரவணன் அருள் தி லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் பல கிளைகளை தொடங்கியுள்ளார். இவர் ஒரு தீவிர கார் சேகரிப்பாளராம். இவரது கேரேஜில் பல சொகுசு , ஆடம்பர கார்கள் உள்ளன. ஒரு வீடியோவில் லெஜன்டின் 11 வகையான கார்கள் வலம் வந்தன.












Click it and Unblock the Notifications