ரஜினிக்கு எதிரான வருமான வரி வழக்கு ஏன் வாபஸ் பெறப்பட்டது தெரியுமா.. சீமான் கொடுத்த கலக்கல் விளக்கம்
நடிகர் ரஜினிக்கு எதிர்காலத்தில் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக மத்திய அரசு அவருக்கு எதிரான வருமான வரி வழக்கை வாபஸ் வாங்கிவிட்டது என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் ரஜினிக்கு எதிர்காலத்தில் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக மத்திய அரசு அவருக்கு எதிரான வருமான வரி வழக்கை வாபஸ் வாங்கிவிட்டது என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், 2002 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் வருமான வரியை முறையாகச் செலுத்தவில்லை என கூறி, 66,22,436 ரூபாய் அபராதம் விதித்து வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதற்காக 2014-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
நேற்று நடந்த இந்த, வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு கோடி ரூபாய்க்குக் குறைவான அபராதத் தொகைக்கு புதிதாக வழக்கு தொடருவது வழக்கம் இல்லை. ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெறுகிறோம். ரஜினிக்கு 1 கோடி ரூபாய்க்கு குறைவாகவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் ரஜினிக்கு எதிரான இந்த வழக்கையும் திரும்ப பெறுகிறோம் என்று கூறினார்.
இதையடுத்து ரஜினிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வருமான வரி வழக்கு, விசாரணை இன்றி முடித்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசின் இந்த முடிவு குறித்து, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ரஜினிக்கு சுயமாக எதுவும் பேச தெரியாது. சினிமாவில் யாரவது எழுதிக் கொடுத்ததை அவர் பேசுவார். தற்போது நிஜத்திலும் அவர் மற்றவர்கள் எழுதிக்கொடுத்ததை பேசுகிறார்.
குருமூர்த்தி எழுதிக் கொடுத்ததைதான் ரஜினி பேசுகிறார். அவருக்கு எதுவும் சுயமாக சொல்லவோ, சிந்திக்கவோ தெரியாது. ரஜினியை வருங்கால தமிழக தலைவராக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.
அதற்கு வருமான வரி வழக்கு இடையில் இருந்தது. அவருக்கு தொந்தரவு வரக்கூடாது என்பதால் வருமான வரி வழக்கை பாஜக திரும்ப பெற்றுவிட்டது. அவருக்கு எதிராக வேறு ஏதாவது வழக்குகள் இருந்தாலும் அதுவும் வாபஸ் பெறப்படும்.
ரஜினி பேசும் கருத்துக்கள் எல்லாமே பாஜகவின் கருத்துக்கள்தான். தமிழகத்தில் பாஜகவை கொண்டுவர ரஜினி பாடுபடுகிறார். ரஜினி சொன்னது போல துக்ளக் படிப்பவன் புத்திசாலி அல்ல, திருக்குறள் படிப்பவன்தான் புத்திசாலி, என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.