பொங்கல் தொகுப்பில் மோசடி..பருப்பு,பாமாயில் நிறுவனங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை
சென்னை: தமிழகத்தில் ரேசன் கடைகளுக்கு சப்ளை செய்யும் இரண்டு நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பொங்கல் தொகுப்பு மோசடி, அருணாச்சலா இன்பக்ஸ், இன்டகரேடட் சர்வீஸ் லிமிடெட் பொங்கல் தொகுப்பில் தரம் இல்லாத பொருட்களை கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டனர்.
தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். அதில் சென்னை, காஞ்சிபுரம், கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நேற்று 350க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதுவரை, ஏதேனும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை மேற்கொண்டனர்.
2வது நாளாக வருமான வரி சோதனை
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள காமாட்சி அண்ட் கோ நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனம் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு, உலர் திராட்சை, முந்திரி, பாதாம், வேர்க்கடலை, போன்றவற்றை விநியோகம் செய்து வருகிறது. உணவுப் பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி மொத்த விநியோகம் செய்து வருகிறது.
எண்ணெய் நிறுவனத்தில் சோதனை
சென்னை மண்ணடி தம்பு செட்டி தெருவில் உள்ள அருணாச்சலா இன்பாக்ஸ் என்கிற நிறுவனம் பருப்பு, எண்ணைப் பொருட்கள் உட்பட உணவு பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்கிறது. அதே போன்று தண்ணைடயார் பேட்டையில் உள்ள பெஸ்டால் மில், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இண்டர்க்ரேட்டடு சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் உட்பட 5 நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு சொந்தமான இடங்களிலும் 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
பருப்பு விநியோகத்தில் முறைகேடு
இரண்டு நிறுவனங்களும், பொது விநியோகத் திட்டத்தின்படி பாமாயில் மற்றும் பருப்பு சப்ளை செய்வதாக கூறப்படுகிறது. 4 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் மற்றும் ஒரு லட்சம் டன் பருப்பு வகைகள் விநியோகத்தில் முறைகேடு நடந்ததாக இந்த நிறுவனங்களின் மீது குற்றச்சாட்டு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பில் மோசடி
அருணாச்சலா இன்பக்ஸ், இன்டகரேடட் சர்வீஸ் லிமிடெட் பொங்கல் தொகுப்பில் தரம் இல்லாத பொருட்களை கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்ததில் 500 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது . இந்த புகாரியின் அடிப்படையில் வருமான வரித்துறையில் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.