தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் வருமான வரி சோதனை.. ஸ்கெட்ச் போட்டது ஏன்?.. பின்னணி தகவல்
சென்னை: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையின் தொடர்ச்சியாக வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை மற்றும் புறநகரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. 40க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துரைப்பாக்கம், பள்ளிக்கரணை ,நீலாங்கரை, எண்ணூர், ஓஎம்ஆர், நாவலூர் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கன்வேயர் பெல்ட் உட்பட உபகரணங்களை சப்ளை செய்து வரும் ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. வரி ஏய்ப்பு புகாரில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சோதனை நடப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடந்த நிலையில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தேனாம்பேட்டை வெங்கடரத்தினம் தெருவில் உள்ள காசியின் வீட்டில் சோதனை நடந்து வருகிறது.
TANGEDCO விற்கு ஒப்பந்தம் அளித்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக சோதனை என தகவல் வெளியாகியுள்ளது. காசியின் வீட்டில் இருந்துதான் பல நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக தகவல்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்தே வருமான வரித்துறை அதிகாரிகள் ஸ்கெட்ச் போட்டுள்ளனர்.
இதே போல தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலும் 3 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனல் மின் நிலையம் வரை கன்வேயர் பெல்ட் அமைக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. மேட்டூரை அடுத்து தூத்துக்குடியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர்.
தூத்துக்குடி அனல் மின் நிலைய ஒப்பந்தம் பெறுவது தொடர்பாக தனியார் நிறுவனம் ஒன்று அதிக பொருட்செலவில் மிகப்பெரிய மது விருந்து ஒன்றை நடத்தியதும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனையடுத்தே இன்று காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை தொடங்கி தூத்துக்குடி வரைக்கும் மிகப்பெரிய சோதனையை நடத்தி வருகின்றனர். இதில் சிக்கும் தகவல்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜியின் மீதான பிடி மேலும் இறுகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications