தினேஷ் கார்த்திக் ரூட் க்ளியர்.. ரிஷப் பண்ட் பேக் அப் தான்.. குறிப்பால் உணர்த்திய ரோஹித் ஷர்மா!
சென்னை: ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைத் தொடரில் ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் இந்திய அணி யாரை பிளேயிங் 11ல் களமிறங்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியை இந்திய அணி 16 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
நேற்றிரவு நடைபெற்ற இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 237 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 61, கேஎல் ராகுல் 57 ரன்கள் விளாசினர்.
டி20 உலகக் கோப்பை போட்டி: எங்கு எப்போது நடைபெறுகிறது?
இந்தியா வெற்றி
இதன் மூலம் 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அந்த அணி விரட்டியது. இரண்டு ஓவர்கள் முடிவில் வெறும் ஐந்து ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை அந்த அணி இழந்திருந்தது. 7வது ஓவரில் மார்க்ரம் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் 4வது விக்கெட்டிற்கு இணைந்த டேவிட் மில்லர் மற்றும் டிகாக், 174 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருந்தும் அந்த அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 37 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த அணி 20 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் மூலம் இந்திய அணி வெற்றி பெற்றது. அதேபோல் தொடரையும் 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.
தினேஷ் கார்த்திக் ஆட்டம்
இந்திய அணியின் வெற்றிக்கு சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல் ஆகியோரின் ஆட்டம் எவ்வளவு முக்கியமாக பார்க்கப்படுகிறதோ, அதே அளவிற்கு தினேஷ் கார்த்திக்கின் ஆட்டமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவர் கடைசி ஓவரில் அடித்த 17 ரன்கள் இந்திய அணிக்கு உறுதுணையாக இருந்தன.
ஏன் டிகே களமிறக்கப்பட்டார்?
அதேபோல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு முதன்மை விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் செயல்படுவார் என்பதும் நேற்றைய போட்டியின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் நேற்று பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்ட நிலையில், 18வது ஓவரின் போது சூர்யகுமார் யாதவ் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
ஏன் ரிஷப் பண்ட் களமிறங்கவில்லை?
அப்போது 5வது இடத்தில் களமிறங்க வேண்டிய ரிஷப் பண்டிற்கு பதில், தினேஷ் கார்த்திக் களமிறக்கப்பட்டார். அதற்கு ஃபினிஷர் என்பதாலும், அனைத்து திசைகளிலும் சிக்சர் விளாசும் திறமையும், உறுதியும் இருக்கிறது என்பதாலும் தினேஷ் கார்த்திக் களமிறக்கப்பட்டார். அதற்கு இந்திய அணிக்கு சரியான பலன் கிடைத்தது. இதேபோல் ஆஸ்திரேலிய தொடரிலும் ரிஷப் பண்டிற்கு முன் தினேஷ் கார்த்திக் ஒரு போட்டியில் களமிறக்கப்பட்டார்.
இந்திய அணி முடிவு
ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் ரிஷப் பண்ட் அனைத்து போட்டிகளிலும் விளையாடி வருகிறார். ஆனால் பேட்ஸ்மேனான அவரைவிடவும் ஃபினிஷரான தினேஷ் கார்த்திக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் டி20 உலகக்கோப்பைத் தொடரில் தினேஷ் கார்த்திகே அனைத்து போட்டிகளிலும் களமிறங்கும் நிலை உள்ளது. அதேபோல் டி20 கிரிக்கெட்டில் 140 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடக் கூடிய தினேஷ் கார்த்திக், எந்த சூழலிலும் இந்திய அணியின் பக்கம் ஆட்டத்தை மாற்றக் கூடிய திறமை வாய்ந்தவர்.
ஃபினிஷர் டிகே
ஆனால் ரிஷப் பண்ட் களத்தில் சில நேரம் நின்று பந்துகளை சந்தித்த பின்னரே, அதிரடிக்கு மாறுவார். இதனால் இடதுகை பேட்ஸ்மேன் என்ற காரணத்தால், ரிஷப் பண்ட் இந்திய அணி பிளேயிங் 11ல் களமிறக்கப்பட வாய்ப்புகள் மிகக்குறைவு என்றே பார்க்கப்படுகிறது. 5வது வீரராக களமிறங்குபவர்கள் பெரும்பாலும் 16வது ஓவரில் களமிறங்குவதால், தினேஷ் கார்த்திகே சரியான தேர்வு என்று பார்க்கப்படுகிறது.