உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தலைவராக சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன்- குவியும் பாராட்டுகள்!
சென்னை: தமிழ்நாடு அரசின் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் (International Institute of Tamil Studies) தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும் சிந்துசமவெளி ஆய்வாளருமான ஆர்.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு மிக நீண்டகாலத்துக்குப் பிறகு மிகப் பொருத்தமான தமிழறிஞர் ஒருவரை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளதற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிகின்றன.
தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல், தமிழின் பெருமையை அயலவருக்குச் சிறப்பாக எடுத்துரைத்தல், உலகத் தமிழறிஞரிடையே தொடர்பு கொண்டு தமிழறிஞர்களும், நிறுவனமும் பயன்கொளும் நிலையில் தமிழாய்வினை வளர்த்தல் என்பன உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் செயல்பாடுகளாகும்.

தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் கற்பித்தல் என்பது மற்றொரு நோக்கமாகும். இவற்றின் அடிப்படையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பல்வேறு திட்டங்களின் வழிச் செயல்பட்டு வருகிறது.
1968-ம் ஆண்டு முதல் சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக தமிழறிஞர்கள் ச.வே.சுப்பிரமணியன், ஏ.என்.பெருமாள், க.த.திருநாவுக்கரசு, ராமர் இளங்கோ, ம.ராசேந்திரன் உள்ளிட்டோர் பொறுப்பு வகித்தனர்.
இந்த நிலையில் உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்- இயக்குநராக மூத்த தமிழறிஞர், சிந்துவெளி ஆய்வாளர், ஒடிஷா மாநில அரசிலும் இந்திய தேர்தலல ஆணையத்திலும் பணியாற்றிய ஆர்.பாலகிருஷ்ணனை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர் ஆர்.பாலகிருஷ்ணன், தமிழ் இலக்கத்தில் இளநிலை, முதுநிலை பட்டங்கள் பெற்றவர்; முன்னாள் முதல்வர் காமராஜரின் பேரன்புக்குப் பாத்திரமானவர்; மதுரை தினமணி நாளிதழில் செய்தியாளராக பணியாற்றியவர்.
இந்திய ஆட்சிப் பணித் தேர்வை தமிழிலேயே எழுதி வெற்றி பெற்ற முதல் தமிழ் மாணவர் ஆர்.பாலகிருஷ்ணன். திராவிட மொழிக் குடும்பம், திராவிடர் மரபினத்தின் பரவல் உலகம், சிந்துசமவெளி பரவிய இடங்களில் தமிழ்ப் பெயர்கள், சிந்துவெளிக்கும் கீழடிக்குமான தொடர்பு என பல்வேறு தளங்களில் ஆய்வறிஞராக பல்வேறு நூல்களை தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு வழங்கியவர். தற்போது உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக- இயக்குநராக தமிழறிஞர் ஆர். பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிறுவனத்துக்கு சிறிது காலம் அரசியல் சார்பு நியமனங்கள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் சர்ச்சைக்குள்ளாகி இருந்தது. இந்த நிலையில் நீண்ட காலத்துக்குப் பின்னர் தலைசிறந்த தமிழறிஞர் ஒருவரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்- இயக்குநராக தமிழ்நாடு அரசு நியமித்துள்ளதற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிகின்றன.












Click it and Unblock the Notifications