கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு.. மக்களை கஷ்டப்படுத்த கிடையாது.. எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்ததான், முழு ஊரடங்கே தவிர மக்களை கஷ்டப்படுத்த கிடையாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது: மருத்துவ நிபுணர்கள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் அடிக்கடி நடத்தப்பட்டு, அவர்கள் வழிகாட்டுதலின்படி ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
உலக அளவில் இந்த வைரசுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நமது மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் களப் பணியாளர்களின் தீவிர முயற்சியின் காரணமாக குணமடைவோர் விகிதம் அதிகரித்துள்ளது.

மக்கள் ஒத்துழைப்பு தேவை
மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பத்திரிக்கைகள், ஊடகங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான், இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும். பொதுமக்கள் ஒத்துழைப்பு என்பது மிக மிக அவசியம். வேகமாக வாகனங்கள் செல்லும் இடத்தில் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு வேகத்தடைகள் ஏற்படுத்தப்படும். அதுபோல, ஒரு நோயின் வேகம் அதிகமாக இருப்பதால், அதை மற்றவர்களுக்கு பரவாமல் தடுப்பதற்கு ஊரடங்கு விதிமுறை வலுப்படுத்தப்பட்டு உள்ளது.

மருந்து கண்டுபிடிக்கவில்லை
ஆனால், எதிர்க்கட்சிகள் அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று விமர்சனம் செய்கிறார்கள். இது புதிய வகையான ஒரு நோய். இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, மருத்துவ நிபுணர்கள் சொல்லக்கூடிய அறிவுரைகளை கடைபிடித்து, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவிலேயே மிக அதிக அளவிற்கு பரிசோதனைகள் செய்தது தமிழகம்தான்.

தனியார் மருத்துவமனை
கொரோனா சிகிச்சைக்கு, சென்னையில் 17,500 படுக்கை வசதி ஏற்பாடு செய்துள்ளோம். முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற முடியும். எனவே ஏழை எளியவர்களாக இருந்தாலும் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல விரும்பினால் சென்று இலவசமாக சிகிச்சை பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மக்கள்
சென்னையிலிருந்து பிற மாவட்டங்கள் செல்லும் மக்களால்தான், பிற மாவட்டங்களில் தொற்று பரவுவதாக சுகாதார அதிகாரிகள் கூறுவதை ஊடகங்கள் வெளியிடுகிறீர்கள். பிற மாவட்டங்களில் தொற்று மிகவும் குறைவுதான். சென்னையிலிருந்து செல்பவர்களால்தான் பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவுகிறது. ஏனெனில் சென்னையிலிருந்து செல்வோருக்கும் முதலில் அறிகுறி தெரிவது இல்லை. அவர்கள் பிறரோடு பழகினால், வைரஸ் பரவுகிறது. எனவே அனைத்து மாவட்டங்களிலும், உரிய சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பி வருகிறோம்.

தடுக்க முடியும்
இந்த நோயை தடுக்கத்தான் முடியும். இப்போதைக்கு முழுமையாக ஒழிக்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. நமது மருத்துவ நிபுணர்களும் அப்படித்தான் கூறுகிறார்கள். இந்த நோய்க்கு மருந்து, நோயின் தன்மையை அறிந்து கட்டுப்படுத்துவது மட்டும்தான். வெளியில் செல்லும்போது கண்டிப்பாக மக்கள் முக கவசம் அணிய வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications