அப்பாவை விட்டுத் தராத அன்புமணி.. தயங்கும் ராமதாஸ்! களத்தில் முக்கிய புள்ளி? விரைவில் நல்ல செய்தி?
சென்னை: அடுத்தடுத்து அரசியல் நிகழ்வுகள் தமிழகத்தில் பரபரப்பாக அரங்கேறிக் கொண்டிருக்க பாமகவில் உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அன்புமணி பொதுக்குழு கூட்டங்களை நடத்தி வரும் நிலையில் 100 நாள் சுற்றுப்பயணத்தையும் மேற்கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் பிரச்சனையை விரைவில் முடிவுக்கு கொண்டு வர 'முக்கிய புள்ளி' ஒருவர் களமிறங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தின் நீண்ட நெடிய வரலாறு கொண்ட கட்சிகளில் பாட்டாளி மக்கள் கட்சியும் ஒன்று. திமுக, அதிமுக திரை பிரபலங்களால் உருவாக்கப்பட்ட நிலையில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த ராமதாஸ் வன்னியர் சங்கத்தை உருவாக்கி, அதனை பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றினார்.
இதுவரை ஏராளமானோர் அந்த கட்சியின் மூலம் எம்.எல்.ஏக்களாகவும், எம்பிக்களாகவும், மத்திய அமைச்சர்களாகவும் ஆகி இருக்கின்றனர். கட்சியை நிறுவிய ராமதாஸ் இதுவரை எந்த பதவியையும் வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாமக குழப்பம்
அதே நேரத்தில் ஆட்சி அதிகாரம் தான் கட்சியை வலுப்படுத்தும் என நினைத்து தன் மகன் அன்புமணி ராமதாசை கட்சிக்குள் கொண்டு வந்ததோடு, மத்திய அமைச்சராகவும் ஆக்கினார். தொடர்ந்து கட்சியின் எதிர்கால நலன் கருதி அவரை பாட்டாளி மக்கள் கட்சி தலைவராகவும் நியமித்தார், அதற்குப் பிறகு எல்லாம் நன்றாக சென்று கொண்டு இருந்த நிலையில் 2026 தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணிக்கான வேலைகளை ஆரம்பித்தது. அப்போதுதான் எழுந்தது பிரச்சனை.
அன்புமணி ராமதாஸ்
மகன் அன்புமணியை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்குவதாகவும் செயல் தலைவராக நியமிப்பதாக அறிவித்தார் ராமதாஸ். மேலும் தொடர்ந்து நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டில் அவர் தெரிவித்த சில கருத்துக்கள் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இருதரப்பும் மாறி மாறி குற்றம் சாட்டி வந்த நிலையில் அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். ஆனாலும் தந்தையிடம் மன்னிப்பு கேட்பதாக அன்புமணி கூறியும் விடாப்படியாக இருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்.
ராமதாஸ்
இதனால் அவர் கட்சிக்குள்ளேயே மோதல் வெடித்திருக்கிறது. பொதுசெயலாளர், பொருளாளர், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் என பலர் அன்புமணி பின்னால் அணிவகுத்து நிற்க ஏற்கனவே கட்சியில் பல்வேறு புகார்களால் நீக்கப்பட்டவர்களை மாவட்ட செயலாளர்கள் என அறிவித்து வருகிறார் ராமதாஸ். இதனால் மாவட்ட அளவில் கோஷ்டி பூசல் வெடித்திருக்கிறது. போட்டி போட்டுக் கொண்டு கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பாமக குடும்ப அரசியல்
இது ஒருபுறம் இருக்க வட மாவட்டங்களில் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை அன்புமணி ராமதாஸ் நடத்தி வருகிறார். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணமும் மேற்கொள்ள இருக்கிறார். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கு இந்த ஏற்பாடு என்கின்றனர். இடையே தந்தை மகனுக்குள் சமாதானம் ஏற்படுத்த தொடர்ந்து முயன்று வருகின்றனர் நிர்வாகிகள்.
ராமதாஸ் பிடிவாதம்
வடிவேல் இராவணன், ஜிகே மணி உள்ளிட்டோர் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தும் ராமதாஸ் இறங்கி வருவதாக இல்லை. குடும்பத்தில் இருப்பவர்கள் பேசியும் பலன் இல்லை. கூடுதலாக ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி உள்ளிட்ட வெளி ஆட்கள் பேசி பார்த்தும் நான்தான் தலைவர் என்பதில் உறுதியாக இருக்கிறார் ராமதாஸ். ராமதாஸ் பிடிவாதத்திற்கு காரணம் அவர் வீட்டில் இருக்கும் ஒரு செவிலியர் தான் என குற்றம் சாட்டுகின்றனர் பாமக நிர்வாகிகள். அவர் யார்? அவரது பின்னணி என்ன? என்பது குறித்து சில தகவல்கள் கசிந்து இருந்தாலும், ஒரு சில காரணங்களால் அவரை அடையாளப்படுத்த தயங்குகின்றனர்.
பாமக சமாதானக் கூட்டம்
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி உட்கட்சி பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும் என்கின்றனர் பாமக நிர்வாகிகள். ராமதாஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் களமிறங்கி இருப்பதாகவும், இரு தரப்பிலும் தொடர்ந்து அவர் பேசி வருவதாக சொல்லப்படுகிறது. அன்புமணி ராமதாஸ் தந்தையுடன் இணக்கமாகச் செல்ல தயாராக இருக்கிறார். ஆனால் நான் தான் தலைவர் என்பதிலும் உறுதியாக இருக்கிறார். தேர்தலுக்கு முன்னதாக கட்சியை வலுவான வெற்றி பெற வைக்க அன்புமணி தலைமை தான் தேவை என ராமதாஸ் இடம் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. விரைவில் ராமதாஸின் எதிர்வினை குறித்த தகவல் வெளியாகும் என்கின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர்.












Click it and Unblock the Notifications