காவலன் எஸ்ஓஎஸ் செயலியை அளித்த "காவலன்".. 31 ஆண்டுகள் கழித்து ஓய்வு பெற்ற ஐபிஎஸ் ரவி
சென்னை: தாம்பரம் காவல் ஆணையராக இருந்த டிஜிபி ரவியின் பதவிக்காலம் நேற்று முடிவடைந்தது. அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.
கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தாம்பரம் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார் ரவி. பின்னர் கடந்த ஜனவரி மாதம் தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் டிஜிபியாக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. ரவி ஐ.பி.எஸ்.,1991-ம் ஆண்டு தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி. இவர் பி.எஸ்சி விவசாயம், சைபர் க்ரைம் தொடர்பாக பட்டங்களைப் பெற்றவர். விவசாயத்தில் பிஹெச்.டி முடித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

தூத்துக்குடி
தூத்துககுடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஏஎஸ்பியாக பணியை தொடங்கினார். பின்னர் ஓசூரில் ஏஎஸ்பியாக பணியாற்றினார். இதையடுதது 1994 ஆம் ஆண்டு எஸ்பியாக பதவி உயர்வு பெற்று நாகப்பட்டினம் திருவாரூரில் பணியாற்றினார். பின்னர திண்டுக்கல், சேலத்தில் டிஐஜியாகவும் பின்னர் சென்னையில் சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராகவும் போக்குவரத்து காவல கூடுதல் கமிஷனராகவும் பணியாற்றினார்.

சென்னை ஏசி
சென்னையில் இணை கமிஷனராக ரவி பணியாற்றிய போதுதான் ரவுடிகள் மீது அதிரடி நடவடிககை எடுத்தார். மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் வங்கிகளில் கடனுதவிக்கும் ஏற்பாடு செய்தார். போக்குவரத்து கூடுதல் ஆணையராக பணிபுரிந்த போது இ செலான் முறையை அறிமுகப்படுத்தினார்.

குற்றத் தடுப்பு பிரிவு
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவில் ஏ.டி.ஜி.பி.,யாக ரவி இருந்தபோது சிறார்வதை ஆபாசப் படங்கள், வீடியோக்களைப் பார்த்தவர்கள், பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடந்த பல்வேறு குற்றங்களை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை கொண்டு வந்ததில் தமிழக மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டார்.

எஸ்ஓஎஸ் காவலன்
குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க இவர் கொண்டு வந்த "காவலன் SOS ஆப்" குறுகிய காலத்தில் தமிழக மக்களிடயே பெரும் வரவேற்பை பெற்றது. ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட எஸ்.பி-யாக இவர் பணியாற்றியபோது பரபரப்பு நிறைந்த தங்கம் முத்துகிருஷ்ணன் கொலை வழக்கு குற்றவாளிகளை திறம்பட விசாரித்து கண்டறிந்ததோடு, நிகழவிருந்த பெரும் ஜாதிக் கலவரத்தை தடுத்து நிறுத்திய பெருமை இவருக்கு உண்டு.

விழுப்புரம் மாவட்ட எஸ்பி
விழுப்புரம் மாவட்ட எஸ்பியாக பொறுப்பேற்ற போது திண்டிவனத்தில் அம்பேத்கர சிலை சேதம் விஷயத்தை லாவகமாக கையாண்டார். மேட்ரிமோனி மோசடி மூலம் 200 இளம்பெண்களை ஏமாற்றிய லியாகத் அலிகானை கைது செய்தார். தங்க நகை மோசடியையும் திறமையாக கண்டு பிடித்தார். ஓய்வு பெற சில நாட்களுக்கு முன் பல்லாவரத்தில் ஐடி ஊழியர் தற்கொலை வழக்கையும் விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 2016 ஆம் ஆணடு புகழ்பெற்ற சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவலர் பதக்கததை பெற்றார்.

ஓய்வு
இவர் ஏற்கெனவே ஓய்வு பெற்ற போது இவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அந்த பதவிக்காலமும் முடிவடைந்து நேற்று ஓய்வு பெற்றார். இதுகுறித்து அவர் தனது டவிட்டர் பக்கத்தில் கூறுகையில் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நான் ஓய்வு பெற்றுவிட்டேன். சில காலத்திற்கு சமூகவலைதளங்களை நான் பயன்படுத்த மாட்டேன். பொதுமக்களுக்கு சேவை செய்ய மீண்டும் வருவேன். அதிலும் ஏழைகள் ஒடுக்கப்பட்டவர்கள், எந்த அதிகாரமும் பரிந்துரையும் இல்லாதவர்களுக்கு உதவுவேன் என்றார்.












Click it and Unblock the Notifications