பாட்களுக்கு ஆப்பு வைத்த ரயில்வே! இனி ரயில் டிக்கெட் புக் செய்ய ‘இது’ அவசியம்! அதிரடி காட்டிய IRCTC!
சென்னை: இந்திய ரயில்வேயின் முன்பதிவு உள்ளிட்ட சேவைகளை வழங்கும் ஐஆர்சிடிசி தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. இனிமேல், ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, உங்கள் ஐஆர்சிடிசி (IRCTC) கணக்குடன் ஆதார் இணைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட உள்ளது. இதற்கு முன்பு, இந்த நடைமுறை தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு மட்டும் இருந்த நிலையில், தற்போது, 60 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கும் ஆதார் கட்டாயம் என அதிரடியாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஏஜெண்ட் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு உண்மையான பயணிகளுக்கு எளிதாக டிக்கெட்டுகள் கிடைக்கும் என்கிறது ஐஆர்சிடிசி
இந்திய ரயில்வேயில் பதிவு செய்யப்படாத ஏஜெண்டுகள் அதிக அளவில் டிக்கெட்டுகளை வாங்கி, பிறகு அதிக பணம் வசூல் செய்து பொதுமக்களுக்கு விற்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதே போல முன்பதிவில் பல சிக்கல்கள் இருப்பதாக ரயில்வேக்கு எதிராக பொதுமக்கள் பலமுறை புகார் அளித்து வந்தனர்.
இதனால் சாதாரண பயணிகளுக்கு தேவையான நேரத்தில் டிக்கெட் கிடைக்காத நிலை உருவாயிற்று. இந்த பிரச்சனையை கட்டுப்படுத்துவதற்காக ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்படுகிறது. ஐஆர்சிடிசி அறிவிப்பின்படி, ஜனவரி 12 முதல் இந்த விதிமுறை முழுமையாக அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஆர்சிடிசி
அதாவது, நீங்கள் எந்த தேதிக்கு பயணம் செய்யப் போகிறீர்களோ, அதற்காக 60 நாட்களுக்கு முன்பாக காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும். அந்த நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய, உங்கள் ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் கண்டிப்பாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆதார் இணைக்காதவர்கள் அந்த நேரத்தில் முன்பதிவு செய்ய முடியாது. எனினும், இந்த மாற்றம் படிப்படியாக அமல்படுத்தப்படுகிறது. டிசம்பர் 29 முதல், காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆதார் இணைத்த பயனர்கள் மட்டுமே இணையத்தின் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
ஆதார் கட்டாயம்
மதியம் 12 மணிக்குப் பிறகு மட்டும் மற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன் பிறகு ஜனவரி 5 முதல், காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஆதார் இணைத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இறுதியாக, ஜனவரி 12 முதல் முழு நாளும் அதே நடைமுறை அமலாகும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ரயில் நிலைய கவுன்டர்களில் சென்று டிக்கெட் எடுப்பவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.
ரயில்வே புதிய அறிவிப்பு
அவர்கள் வழக்கம்போல அடையாள ஆவணங்களுடன் டிக்கெட் பெறலாம். இந்த மாற்றம் ஆன்லைன் முன்பதிவுக்கே மட்டும் பொருந்தும். ரயில்வே அதிகாரிகள் கூறுவதன்படி, இந்த நடவடிக்கையின் மூலம் ஏஜெண்டுகள் தரும் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை தடுக்கப்படும். குறிப்பாக, பண்டிகை காலங்களில் சில ஏஜெண்டுகள் ரூ.2,000 முதல் ரூ.4,000 வரை கூடுதலாக வசூல் செய்வதாக புகார்கள் வந்துள்ளன. ஆதார் இணைப்பு மூலம் ஒரே நபர் அதிக டிக்கெட்டுகளை வாங்குவதை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆதார் ஓடிபி சரிபார்ப்பு
மேலும், சில ரயில்களில் ஆதார் சரிபார்ப்புடன் ஓடிபி (OTP) மூலம் சரிபார்ப்பு நடைமுறை ஏற்கனவே நடைபெற்று வருகிறது. இதன்மூலம் டிக்கெட் உண்மையான பயணிக்கே வழங்கப்படுவதை உறுதி செய்ய முடியும். பயணிகளுக்கு நேர்மையான முறையில் டிக்கெட் கிடைக்கவும், பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்யவும் இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது என கூறுகிறது ஐஆர்சிடிசி.












Click it and Unblock the Notifications