செம ரிசல்ட்.. சீமான் அடிக்கடி சொல்வாரே, அதேதான்.. நல்லகண்ணுவுக்கு திரண்டு வந்து ஓட்டுபோட்ட வாசகர்கள்
நல்லகண்ணு முதல்வராக வருவதற்கு பெரும்பாலான வாசகர்கள் ஆர்வம் காட்டி உள்ளனர்
சென்னை: ஊருக்கே தெரியும் நல்லக்கண்ணு நல்லவர் என்பது.. ஆனாலும் அவரால் முதல்வராக முடியவில்லையே..ஏன்?
சீமான் தன்னுடைய பேட்டியில் அடிக்கடி சொல்லுவார், "அய்யா நல்லகண்ணுக்கு இல்லாத தகுதி இங்கே எவருக்கு இருக்கிறது" என்று.. 4 நாட்களுக்கு முன்பு விஜய், கமல் குறித்து காட்டத்தை தெரிவித்தபோதுகூட, நல்லகண்ணுவைதான் சீமான் முன்னிறுத்தி பேசினார்.. "நல்லகண்ணு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர்களைத் தாண்டி புனிதர்கள் இருந்தால் சொல்லுங்கள்" என்று கேட்டார்.
சீமான் கேட்டது ஒரு வகையில் சரியே.. நல்லவர் என்ற அரசியல் கட்சி தலைவரில் நல்லகண்ணு முதலிடத்தை பெறுகிறார்.. ஆனால், அவர் முதல்வராக முடியவில்லை என்ற வருத்தம் சிலருக்கு இப்போதும் உள்ளது.
சிறப்புகள்
தூய்மையான அரசியல், மாற்றுச் சித்தாந்தம் கொண்டவர்களும் நேசிக்கும் ஆளுமை, விட்டுக்கொடுக்காத போராட்டக் குணம், கடுமையாக யாரையும் விமர்சிக்காத போக்கு, என இன்னும் இன்னும் பல சிறப்புகளை பெற்றவர் மூத்த தலைவர் 'தோழர் நல்லகண்ணு'.. கறைபடாத கைகளுக்கு சொந்தக்காரர்.. எளிமையின் இலக்கணமாக தற்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்.. நேற்று முன்தினம் இவருக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.. அப்போது பல கட்சி தலைவர்களும் திரண்டு வந்து வாழ்த்து சொல்லி இருந்தனர்.
கருத்து கணிப்பு
அப்போது நம் வாசகர்களிடம் ஒரு கருத்து கணிப்பு நடத்தினோம்.. அதில் "தோழர் நல்லகண்ணு முதல்வராகவில்லையே என்ற ஏக்கம் உங்களுக்கு உண்டா?" என்று கேட்டிருந்தோம். அதற்கு "நிறையவே இருக்கிறது" என்ற ஆப்ஷனுக்கு 58.08 சதவீதம் பேர் திரண்டு வந்து தங்கள் வாக்குகளை அழுத்தமாக தந்துள்ளனர்.
புரிஞ்சிக்க முடியல
"இப்போதுகூட முதல்வராக்கலாம்" என்ற ஆப்ஷனுக்கு 12.7 சதவீதம் பேரும், "தமிழர்களை புரிஞ்சிக்க முடியலை" என்ற ஆப்ஷனுக்கு 29.22 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். பெரும்பாலானோர் இன்னமும் நல்லகண்ணு மீதான நம்பிக்கையை, அபிமானத்தை, அளவுக்கு அதிகமாக வைத்துள்ளது ஆச்சரியத்தை தருகிறது.. மேலும் இப்போதுள்ள அரசியல் சூழலில், வாசகர்களுக்கு இருக்கும் அதிருப்தியும் வெளிப்படுகிறது.
நல்லகண்ணு
நல்லகண்ணு சார்ந்த கட்சி தொழிலாளர் கட்சிதான்.. இருந்தாலும் இவரை அன்று ஏற்கவில்லை கோவை மக்கள் ஏற்கவே இல்லை.. இத்தனைக்கும் கோவை, தொழிலாளர்களை அதிகம் கொண்ட தொகுதி... 1999 எம்பி தேர்தலில் நல்லக்கண்ணுவை எதிர்த்து நின்ற போட்டியாளர், பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.. அதோடு சரி, நல்லகண்ணு தேர்தலில் போட்டியிடுவதையே நிறுத்திக்கொண்டார்..
நீங்கா குறை
இனி எத்தனை வருஷங்கள் ஆனாலும் சரி, அரசியலுக்கு வந்த கொஞ்ச நாளிலேயே புது கட்சி ஆரம்பித்தவர்களுக்கும், கட்சியே ஆரம்பிக்காதவர்களுக்கும் ஆதரவு அளிக்கும் இந்த தமிழகம், இன்றுவரை ஏனோ நல்லக்கண்ணுவிற்கு அந்த உயரத்தை கொடுக்காமல் இருப்பது அரசியல் பற்றிய அறிவு குறைவாக இருப்பதைதான் வெளிக்காட்டுவதாக உள்ளது. அதை விட தொழிலாளர்கள் நிறைந்த கோவையில் நல்லகண்ணு தோற்கடிக்கப்பட்டது அந்த நகருக்கு காலத்துக்கும் நீங்காத குறைதான்!