ஏசியா? ஏர் கூலரா? அடிக்கும் வெயிலுக்கு எது பெஸ்ட்? படிச்சு பார்த்து நீங்களே செலக்ட் பண்ணுங்க
சென்னை: தமிழகத்தில் இந்த முறை வெயில் பட்டையை கிளப்பி வருகிறது. எனவே பலரும் ஏசி, ஏர் கூலர் வாங்க படையெடுத்துள்ளனர். இருப்பினும் இரண்டில் எது சிறந்தது என்கிற சந்தேகம் நீடித்து வருகிறது.
ஏர் கூலர்: ஏர் கூலர் இயங்கும் விதம் சிம்பிள். வெளியில் உள்ள காற்றை இழுத்து உள்ளே விடுவதன் மூலம் காற்றை கொடுக்கிறது. ஏர் கூலரில் காற்றை குளிர்விக்கும் அட்டை இருக்கும். நாம் தண்ணீரை ஊற்றும்போது அந்த அட்டை ஈரப்பதம்மிக்கதாக மாறிவிடுகிறது. அதைத்தாண்டிதான் நமக்கு காற்று வருகிறது என்பதால், காற்று ஜில் என்று இருக்கிறது. இதனை பயன்படுத்துவதும் எளிது. ஏர் கூலரில் தண்ணீரை ஊற்ற வேண்டும். சுவிட்ச் போட்டால் போதும். ஏர் கூலர் ரெடி.

எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். என்பதாலும், பராமரிப்பு மற்றும் மின்சார செலவு குறைவு என்பதாலும் பலரும் ஏர் கூலர் நோக்கி நகர்கின்றனர்.
பிரச்னைகள்: இருப்பினும் இதிலும் சில பிரச்னைகள் உண்டு. தண்ணீர் ஊற்றி பயன்படுத்துகிறோம் என்பதால், இதனை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் சில உடல் நலப் பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதேபோல ஒவ்வொரு ஏர் கூலரும் குறிப்பிட்ட அளவு டேங்க் கொள்ளவைதான் கொண்டிருக்கும். எனவே அடிக்கடி தண்ணீரை ஊற்றிக்கொண்டிருக்க வேண்டும். தவிர, இடத்தையும் இது அடைத்துக்கொள்ளும்.
ஏசி: இதற்கு மாற்றாக வந்ததுதான் ஏ.சி. ஏர் கண்டிஷ்னர் எனப்படும் ஏசி, ஏர் கூலரை விட வித்தியாசமாக செயல்படுகிறது. இது எந்த காற்றையும் வெளியிலிருந்து உள்ளே இழுப்பதில்லை. இதற்கு பதிலாக குளிர்பதன கெமிக்கலை கொண்டு செயற்கையாக குளிர்ந்த சூழலை உருவாக்குகிறது. அதாவது, ஹைட்ரோ குளோரோ ஃப்ளோரோ கார்பன் (hydrochlorofluorocarbons), ஹைட்ரோ ஃப்ளோரோ கார்பன் (hydrofluorocarbons) எனப்படும் இரண்டு கெமிக்கல்கள் இதற்கு பயன்படுத்தப்படுகின்றன.
செயல்முறை: இந்த கெமிக்கல்கள் கம்ப்ரசர் மூலம் அழுத்தப்பட்டு ஏசிக்கு வருகிறது. அப்படி வரும்போது அறையின் வெப்ப நிலை அதிகமாக இருப்பதால், உடனே ஆவியாகிவிடுகிறது. ஆவியாகும்போது குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எனவே, ஏசி போட்டிருக்கும் அறை குளிர்ச்சியாகிறது. இப்படி ஆவியான கெமிக்கல்கள் மீண்டும் உள் இழுக்கப்பட்டு திரும்பவும் திரவ கெமிக்கல்களாக மாற்றப்பட்டு கம்ப்ரசருக்குள் செலுத்தப்படும். இதுதான் ஏசியின் செயல்முறை.
சிக்கல்கள்: ஆனால் இதிலும் சில பிரச்னைகள் இருக்கின்றன. முதல் சிக்கல் கரண்ட் பில். ஏசியின் ஆரம்ப விலையே எப்படி இருந்தாலும் ரூ.30 ஆயிரம் வரை வரும். அடித்து பிடித்து ஏசி வாங்கிவிட்டால் கூட, அதற்கு கரண்ட் பில் கட்டும் செலவு ஹெவியாக இருக்கும். ஒரு டன் அளவு கொண்ட 3 ஸ்டார் ஏசி ஒன்று ஒரு நாளைக்கு 8 மணி நேரம் இயங்கினால் மாதம் ரூ.1470 வரை கரண்ட் பில் கட்ட வேண்டியது வரும்.
அதேபோல ஏசி சுற்று சூழலுக்கு ஏற்றது கிடையாது. இதில் பயன்படுத்தப்படும் ஹைட்ரோ குளோரோ ஃப்ளோரோ கார்பன், ஹைட்ரோ ஃப்ளோரோ கார்பன் ஆகிய கெமிக்கல்கள் ஆவியாகும் போது அது ஓசோன் மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எது பெஸ்ட்?: நீண்ட நேரம் ஏசியில் இயங்கும்போது அந்த இடத்தில் ஈரப்பதம் குறைவாக இருக்கும். இது கண்கள் மற்றும் சரும வறட்சியை ஏற்படுத்தும். கண்கள் வறண்டு போனால் எரிச்சல், கண் சிவத்தல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். இது நீடிக்கும் பட்சத்தில் பார்வை மங்கலாவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இப்படியாக ஏர் கூலர், ஏசி என இரண்டிலும் சில நன்மைகள், தீமைகள் இருக்கின்றன. எனவே எது சிறந்தது என்பதை நீங்களே யோசித்து பார்த்து வாங்குவது நல்லது.












Click it and Unblock the Notifications