நாடகத்தில் ஒரு திடீர் திருப்பம்.. திரும்பி பார்க்கும் திமுக.. விரும்பிப் பார்க்கும் பாமக...!
Recommended Video

சென்னை: நாடகத்தில் ஒரு திடீர் திருப்பம்.. அதாவது அதிமுக அணியுடன் எல்லாவற்றையும் பேசி கிட்டத்தட்ட சுபம் கார்டு போடப் போகும் வேளையில் திடீரென திமுக பக்கம் பார்வையைத் திரும்பியுள்ளதாம் பாமக. திமுக தரப்பிலிருந்து வந்த கிரீன் சிக்னல்தான் இதற்குக் காரணமாம்.
தமிழக அரசியல் களம் இதுவரை இல்லாத அளவுக்கு நீர்த்துப் போய்க் காணப்படுகிறது. வலுவான தலைவர்கள் யாரும் இல்லை. அதிமுக பலவீனப்பட்டுக் கிடக்கிறது. ஆனால் அதன் கதை முழுமையாக முடியவில்லை. தொண்டர் பலத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. இதனால்தான் அந்தக் கட்சியுடன் கூட்டணி சேரவும் பலர் ஆர்வமாக உள்ளனர்.
குறிப்பாக பாஜக, பாமக மற்றும் தேமுதிக ஆகியவை அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் முடிவில் உள்ளன. இவர்களுக்கு இடையே பல்வேறு கட்டமாக பேச்சுவார்த்தை நடந்து தொகுதிப் பங்கீடு கூட இறுதியாகி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் திடீர் டிவிஸ்ட்டாக திமுக பக்கம் பாமக பார்வையைத் திருப்பியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ராமதாஸின் அதிமுக பாசம்
உண்மையில் டாக்டர் ராமதாஸ்தான் அதிமுக கூட்டணியை அதிகம் விரும்புகிறாராம். திமுகவுடன் கை கோர்க்க அவருக்கு விருப்பம் இல்லை என்கிறார்கள். கடந்த கால கசப்புணர்வுகளே இதற்கு முக்கியக் காரணம்.

அன்புமணியின் திமுக பாசம்
ஆனால் பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு திமுகவுடன் கரம் கோர்க்கவே விருப்பம். இந்த லோக்சபா தேர்தலில் திமுக இடம் பெறும் அணிதான் மத்தியிலும் ஆட்சியமைக்கும் என்று அவர் திடமாக நம்புகிறார். எனவே திமுகவுடன் கைகோர்ப்பதே சரியான முடிவாக இருக்கும் என்பது அவரது நிலைப்பாடு.

வடக்கில் செம வலுவுடன் பாமக
வட தமிழகத்தைப் பொறுத்தவரை (கொங்கு மண்டலத்திலும் கணிசமாக) வலுவாக இருப்பது பாமகதான். திமுகவுக்கும், தேமுதிகவுக்கும் தனியாக ஒரு ஷேர் இருந்தாலும் கூட வடக்கில் தனது பலத்தை மேலும் கூட்டி விட்டது பாமக. கடந்த 5 ஆண்டுகளில் பாமக இங்கு மிகப் பெரிய சக்தியாக, கூடுதல் வலுவுடன் திகழ்கிறது. காரணம், அன்புமணி ராமதாஸின் அயராத பணிகள்.

திமுகவுக்கும் ஒரு ஆசை
இப்படிப்பட்ட பாமகவை இழக்க திமுகவுக்கும் மனமில்லை. பாமகவின் பலத்தை நாமும் பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போதைய சூழ்நிலையில் அதிமுக என்னதான் பலவீனமாக இருந்தாலும் அதிகாரம் அதன் கையில் உள்ளது. பாஜகவும் முடிந்தவரை நம்மை காலி செய்ய துடிக்கும். எனவே வலுவான பாமகவை நம் பக்கம் இழுத்தால் நமது கை ஓங்கி விடும் என்று திமுக தலைமையிடம் துரைமுருகன் எடுத்துரைத்திருப்பதாக பேச்சு அடிபடுகிறது. இதையடுத்து திமுக தரப்பிலிருந்து பாமகவுடன் பேச்சுவார்த்தை புதிதாக தொடங்கியுள்ளதாக சொல்கிறார்கள்.

சில கட்சிகள் வெளியேறலாம்
பாமக உள்ளே வந்தால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதல் ஆளாக வெளியேறும் என்று தெரிகிறது. ஏற்கனவே பாமக இடம் பெறும் அணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என்று திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே திமுகவுக்கு பாமக வந்தால் விடுதலைச் சிறுத்தைகள் வெளியேறலாம். அப்படி வெளியேறும் சிறுத்தைகள் அதிமுக பக்கம் போகக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

டிவிஸ்ட்டால் பரபரப்பு
இப்படி திடீரென பாமகவை வைத்து ஒரு புதிய டிவிஸ்ட் கிளம்பியிருப்பதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கூடியுள்ளது. ஆனால் எல்லாமே இதுவரை அதிகாரப்பூர்வம் இல்லாமல்தான் நடந்து வருகின்றன. அதாவது பேக் டேர் பாலிடிக்ஸில்தான் அத்தனை கட்சிகளும் இறங்கியுள்ளன. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை எதையும் உறுதியாக கூற முடியாது.












Click it and Unblock the Notifications