ஜெயக்குமார் சொல்ற மாதிரி தி.மு.கவின் "பி டீமா" சசிகலா?!
சென்னை: அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவை, திமுகவின் பி டீம் என்று சொல்லியிருப்பது அரசியல் வட்டாரத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையிலிருந்து சசிகலா தமிழகம் திரும்பியுள்ள நிலையில், அவருடைய வருகை குறித்து தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகள் அவர் தி.மு.கவின் பி டீம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்ததை வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளதாக விவாதங்கள் கிளம்பியுள்ளன.
மேலும், ஒன்றினைவோம் வா என்று சசிகலா தி.மு.கவையே அழைத்துள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுதான் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.
வழக்கு
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களுரூவிலிருந்து தமிழகம் திரும்பியுள்ளார். சசிகலாவின் வருகை தமிழக அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பார்க்கப்பட்டது. சசிகலா முதலாவதாக 7ம் தேதி வருவார் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், 8ம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சசிகலாவின் வாகனம் விபத்துக்கு உள்ளானது.
விபத்துகள்
இதையடுத்து அவர் இரண்டு முறை தனது வாகனத்தை மாற்றி பயணித்தார். இந்த விபத்து சசிகலாவிற்கு அபசகுணமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் சசிகலாவின் வருகையை ஊடகங்கள் ஒளிபரப்பின ஆனால் தி.மு.க ஆதரவு சேனலான சன் டி.வி காலை முதல் தொடர்ந்து ஒளிபரப்பி வந்தது. வாணியம்பாடி அருகே சசிகலா கொடுத்த பேட்டியையும் ஒளிபரப்பியது.
சசிகலாவின் வருகை
சசிகலாவின் வருகை ஆளும் தரப்பிற்கு எதிராக அமையும் என்ற நோக்கத்தில், சன் டி.வி இந்த செய்தியை தொடந்து ஒளிபரப்பி வந்ததாக கருதினாலும், டி.டி.வி தரப்பிலிருந்து சன் டி.வியிடம் சசிகலாவின் வருகையை தொடர் நேரலை ஒளிபரப்பு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டதாக ஒரு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சிவகங்கையில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், "முதலமைச்சர் எடப்பாடியை நம்பி அ.தி.மு.கவால் இனி பயணம் செய்ய முடியாது, அவரை நம்பி ஆட்சி நடத்த முடியாது, கட்சியும் நடத்த முடியாது" என்று தெரிவித்தார்.
வேறு விதம்
அதற்கு முந்தைய கூட்டத்தில் கூட "பெங்களூருவிலிருந்து ஒருவர் வருகிறார், அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லை என்று கூறினார். திட்டங்கள் குறித்தும் ஆட்சி குறித்தும் விமர்சனம் செய்து வந்த ஸ்டாலின் தற்போது கட்சியை நடத்த முடியாது என்று கூறியது அரசியல் வட்டத்தில் வேறு விதமாக பார்க்கப்படுகிறது. இது குறித்து விசாரித்த போது, சசிகலா தரப்பு தி.மு.க வுடன் ரகசிய கூட்டணி பேசியுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.
நண்பன்
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கூற்றுக்கு ஏற்ப இந்த கூட்டணி செயல்படுவதாக தெரிகிறது. தேர்தலுக்கு பின் சசிகலா அ.தி.மு.கவை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக தி.மு.கவுடன் ரகசியம் பேரம் பேசியுள்ளதாகவும் தெரிகிறது. இது குறித்து டி.டி.வி தினகரன் ஸ்டாலினை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயக்குமார் பேச்சு
இதுகுறித்து சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் ஒன்றினைவோம் வா என்று தி.மு.கவையே சசிகலாவும் டி.டி.வி தினரனும் அழைத்து வருவதாக தெரிவித்தார். எதுவாக இருந்தாலும் சரி, கொள்கைக்கு எதிராக இருப்பவர்களுடன் ரகசிய கூட்டணி அமைத்து கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுவர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கூற்று நிஜமாகும் சூழல் உருவாகியுள்ளது.