பாஜக அதிமுக மோதல் உச்சம்... ஹெச் ராஜா ஆண்மையுள்ளவரா... அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!!
சென்னை: ட்விட்டரில் ஒரு கருத்தை போட்டுவிட்டு அட்மின் போட்டார் என பல்டி அடிக்கும் ஹெச்.ராஜா ஆண்மையுள்ளவரா. நீதிமன்றத்தில் போய் கூனி குறுகி மன்னிப்பு கேட்டவர் ஆண்மையுள்ளவரா என்று ஹெச். ராஜாவைப் பார்த்து அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் தொடர்ந்து நேற்று முதல் ஆண்மை என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி வார்த்தைப் போர் நடத்தி வருகின்றனர். இன்று இதன் நீட்சியாக பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்திருக்கும் பதிலில், ''நீதிமன்றத்தில் போய் கூனி குறுகி மன்னிப்பு கேட்டவர் ஆண்மையுள்ளவரா. டிவிட்டரில் ஒரு கருத்தை போட்டுவிட்டு அட்மின் போட்டார் என பல்டி அடிக்கும் ஹெச்.ராஜா ஆண்மையுள்ளவரா. முந்தானை தலைவரை தானே எல்லோரும் வந்து சந்தித்தார்கள். ஹெச்.ராஜாவின் சொற்கள் அவருக்குதான் பொருந்தும்.

அதிமுகவினரை ஹெச்.ராஜா உரசி பார்க்கக்கூடாது. அவர் வரலாறு தெரியாமல் இன்றைய தலைமுறையை ஏமாற்றி வருகிறார். விநாயகர் சதுர்த்தி விழாவில் நீதிமன்ற அறிவுரைகளை, உத்தரவுகளை பின்பற்றுவோம்.'' என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழா வரும் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வழக்கமாக இந்து அமைப்புகள் பொது இடங்களில் விநாயகரை வைத்து 10 நாட்களுக்கு கும்பிடுவது வழக்கம். தற்போது கொரோனா பாதிப்பு இருப்பதால், தமிழகத்தில் பொது இடங்களில் வைத்து விநாயகர் சிலைகளை கும்பிட வேண்டாம் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. கர்நாடகாவில் அனுமதித்து இருக்கும்போது ஏன் தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். பொது இடத்தில் வைத்து வழிபடுவோம் என்று இந்து முன்னணி அறிவித்துள்ளது. அவர்களையே நாங்களும் பின்பற்றுவோம் என்று தமிழக பாஜக அறிவித்துள்ளது.
இதையடுத்து தனது ட்விட்டர் பதிவில், ''கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு. நேற்றிலிருந்து சென்னையிலும் டாஸ்மாக் திறக்கப்பட்டு விட்டது. இதனால் கொரோனா வராதாம். ஆனால் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து 5-10 பேர் சமூக இடைவெளியோடு விசர்ஜனம் செய்தால் கொரோனா வந்துடுமாம். பகுத்தறிவு. பகுத்தறிவு'' என்று ஹெச் ராஜா பதிவிட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளித்து இருந்த மதுரை மண்டல அதிமுக ஐடி விங்க் பொறுப்பாளர் ராஜ் சத்யன் தனது ட்விட்டர் பதிவில், ''நீதிமன்றத்தை பழித்துப்பேசி பின் அட்மின் தவறென்று பதுங்கிய போதே உங்கள் ஆண்மை தெரியும் எங்களுக்கு. மக்கள் பணியை மகேசன் பணியாக ஆற்றும் அம்மா அரசுக்கு சர்மாக்களின் சான்று தேவையில்லை. சுயேச்சையாக 999 ஓட்டுக்கு மேல் வாங்கி மக்களிடத்தில், உங்கள் அரசியல் ஆண்மையே நிரூபியுங்களேன்'' என்று பதில் அளித்து இருந்தார். இந்த நிலையில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications