"No 2" உதயநிதி.. ஸ்டாலின் முடிவிற்கு என்ன காரணம்? அடுத்து துணை முதல்வர்! ஆஹா இவ்வளவு இருக்கா?
சென்னை: திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று முதல்நாள் தமிழ்நாடு அமைச்சராக பதவி ஏற்று உள்ளார். இன்று இவருக்கு விளையாட்டு, இளைஞர் நலன் ஆகிய துறைகள் அளிக்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலினின் சிறப்பு செயல்திட்ட செயலாக்க துறையும் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
மொத்தம் முதல்வர் ஸ்டாலினையும் சேர்த்து நேற்று 11 அமைச்சர்களின் இலாக்காக்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான நிலையில் இதற்கு பின் நடந்த சம்பவங்கள், இனி உதயநிதி செய்ய வேண்டியது என்ன என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பேட்டி அளித்துள்ளார். அவர் பேட்டி பின்வருமாறு,
டோட்டலா மாறுதோ.. பாஜக போடும் அஸ்திரக்கோலம்.. பலே பலே கணக்கு.. ரெடியாகும் திமுக.. சாய்கிறதா
உதயநிதிக்கு அமைச்சர் பதவி
கேள்வி: உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்பதை எதிர்பார்த்தீர்களா? இல்லை இன்னும் காலம் எடுத்து இருக்கலாம் என்று நினைக்கிறீர்களா?
பதில்: நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு பதவி கொடுக்கலாம் என்றுதான் முதல்வர் ஸ்டாலின் நினைத்துக்கொண்டு இருந்தார். முதல்வர் ஸ்டாலினுக்கு குடும்ப நெருக்கடி இருந்தது உண்மை. ஆட்சி பதவி ஏற்கும் போதே அவருக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வந்தனர். ஒரு வருடம் ஆட்சி முடிந்த கடந்த மே மாதத்திலும் இதே பிரஷர் வந்ததே. அப்போதே ஜூன் -ஜூலையில் அமைச்சராக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. அப்போதே நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு அமைச்சரவையை மாற்றலாம் என்ற முடிவை முதல்வர் எடுத்துவிட்டார். ஆனால் இப்போது அவருக்கு இருந்த நெருக்கடி காரணமாக அமைச்சரவை மாற்றத்தை தவிர்க்க முடியவில்லை என்று நினைக்கிறேன்.
நெருக்கடி
கேள்வி: குடும்ப நெருக்கடி மட்டும்தான் இருக்கிறது என்கிறீர்களா? அவர் தொகுதியில் பிரபலமாக இருக்கிறார்., நன்றாக பிரச்சாரம் செய்கிறார், மக்கள் ஆதரவும் இருக்கிறதே.. அது காரணம் இல்லையா?
பதில்: அவர் எய்ம்ஸ் பற்றி பிரச்சாரம் செய்தது. அவரின் பிரச்சாரம் எடுபட்டது. ஆனால் அவர் மட்டும் வெற்றிக்கு காரணம். திமுகவின் பலம். அடிமட்ட அளவில் தொண்டர்கள் பணி. அதிமுக மீது இருந்த அதிருப்தி. இப்படி பல விஷயங்கள் காரணமாக இருந்தது. அவர் எப்போது அமைச்சர் ஆனாலும் அது வாரிசு அரசியல் என்றுதான் சொல்லுவார்கள். அதை பற்றி பேச வேண்டியது இல்லை. அவர் சேப்பாக்கத்தில் செய்ததை தமிழ்நாடு முழுக்க எப்படி செய்ய போகிறார். கட்சிக்கு எப்படி பயன் தர போகிறார் என்று பார்க்க வேண்டும். பாஜக என்ற தேசிய கட்சி வலிமையாக உள்ளது. அவர்கள் வேற லெவலில் டீலிங் செய்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் திமுகவிற்கு கடும் அழுத்தம் உள்ளது. இதை உதயநிதி எப்படி எதிர்கொள்ள போகிறார் என்று பார்க்க வேண்டும்.
அவசரம்
கேள்வி: இந்த பதவி ஏற்பை தவிர்த்து இருக்கலாம்.. அவசரம் ஏன் என்று சொல்கிறார்களே?
பதில்: எதிர்க்கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் வாரிசு அரசியல் என்றுதான் சொல்ல போகிறார்கள். 2030ல் அமைச்சர் ஆனாலும் இதைத்தான் சொல்லுவார்கள். இதை மாற்ற முடியாது. தற்போது அமைச்சர் ஆன வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு உதயநிதி எப்படி செயல்படுகிறார் என்று பார்க்க வேண்டும். ஸ்டாலினுக்கு பதவி கொடுத்த போது தனக்கு வந்த நெருக்கடிகளை கருணாநிதி சிறப்பாக எதிர்கொண்டார். பாஜகவில் இளம் தலைவர் இருக்கிறார், அவருக்கு பதிலடி தர வேண்டும், முதல்வர் ஸ்டாலினின் பணி சுமையை குறைக்க வேண்டும், அதற்கு நம்பகமான 2ம் கட்ட தலைவர் வேண்டும், ஸ்டாலினை எல்லோரும் எப்போதும் போய் பார்க்க முடியாது. உதயநிதி இந்த இடத்தை எல்லாம் நிரப்புவார். அவர் அதிகாரிகள், அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு ஒரு பாலமாக இருப்பார்.
நல்லது
கேள்வி: உதயநிதி வந்தது திமுகவிற்கு நல்லதுதான் என்று சொல்கிறீர்களா?
பதில்: நிச்சயமாக.. ஸ்டாலின் முதல்வர் ஆன போது அமைச்சர்கள் பலர் தங்கள் வருத்தங்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. ஐ பெரியசாமி தனக்கு வேறு துறை வேண்டும் என்ற கேட்ட போது கிடைக்கவில்லை. அவர் ஒரு சீனியர். அவரே முதல்வர் ஸ்டாலினை அணுகி தனக்கு வேண்டப்பட்ட துறையை பெற முடியவில்லை. ஆனால் இப்போது உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைத்த போது ஐ பெரியசாமிக்கு அவர் விரும்பிய துறை கிடைத்துள்ளது. இனி அப்படி இருக்காது.. முதல்வரிடம் பேச வேண்டும் என்றால் உதயநிதியிடம் சொல்லி இனி தகவல் அனுப்ப முடியும். உதயநிதி பாலம் போல செயல்படுவார். நிர்வாகிகள் எளிதாக முதல்வரிடம் தகவலை அளித்து உதவிகளை பெற முடியும்.
நம்பர் 2
கேள்வி: முதல்வரின் சில பொறுப்புகளை கூட உதயநிதி இனி கவனிப்பார் என்கிறீர்களா?
பதில்: ஆம்.. நிச்சயமாக.. கட்சியிலும்.. ஆட்சியிலும் அவர்தான் நம்பர் 2 என்று சொல்லிவிட்டேனே. பின்னர் என்ன. கிட்டத்தட்ட அவர் துணை முதல்வர் மாதிரிதான். நாடாளுமன்ற தேர்தல் கழித்து அதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. அவர் 1 வருடம் நன்றாக செயல்படுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் மீது விமர்சனங்கள் இருக்கும். எல்லோரும் எளிதாக அணுக கூடிய தலைவராக இருக்கிறார். ஆனால் அவர் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் ரீதியாக பலருக்கு பதிலடி கொடுக்க அவர் கற்றுக்கொள்ள வேண்டும். நிறைய படிக்க வேண்டும் அவர். சினிமாவை மொத்தமாக விளக்கி வைக்க வேண்டும். இல்லையென்றால் அவருக்குத்தான் சிக்கல்.
சினிமா
கேள்வி: சினிமாவில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
பதில்: அவர் படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறி விட்டார். அமைச்சராகிவிட்டால் நடிக்க கூடாது என்று சட்டமில்லை. அது மரபு. அதை உதயநிதி கடைபிடிக்கிறார். சினிமாவை தயாரிப்பது மூலமாக பல சிக்கல்கள் வரும். அவருக்கு கடுமையான எதிர்ப்புகள் வரும். அதற்கு ஒரே வழி உதயநிதி சினிமா துறையில் இருந்தே மொத்தமாக ஒதுங்கி இருக்க வேண்டும். அப்போதுதான் அவரால் சர்ச்சைகளை சமாளிக்க முடியும், என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கூறியுள்ளார்.