மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியா.. டிசம்பரில் ககன்யான் திட்டத்தின் முக்கிய சோதனை! இஸ்ரோ
சென்னை: இந்தியா இது வரை மனிதர்களை சொந்தமாக விண்வெளிக்கு அனுப்பியது கிடையாது. இதை சாத்தியப்படுத்த ககன்யான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தின் மிக முக்கிய சோதனை வரும் டிசம்பர் மாதம் நடத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது என்பது உலக சாதனை என்றாலும் கூட, ஆனால் அதைவிட முக்கியமாக, இது சாமானிய மக்களுக்கும் அறிவியல் மீதான ஈர்ப்பை அதிகரிக்கும். காலங்காலமாக விண்வெளி பயணங்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் விண்வெளி பயணங்களை மேற்கொள்ளும்போது இந்தியாவில் அது பேசுபொருளாக மாறுகிறது.

இப்படி இருக்கையில், சொந்த முயற்சியாக இஸ்ரோ சார்பில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு இந்தியாவிலிருந்து 4 வீரர்கள் விண்வெளிக்கு பறப்பார்கள் என்று இஸ்ரோ கூறியிருக்கிறது.
ஏற்கெனவே இந்தியாவை சேர்ந்தவர்கள் விண்வெளிக்கு பயணித்திருக்கிறார்கள். கடந்த 1982ம் ஆண்டு ரஷ்யா சல்யூட் 7 எனும் விண்வெளி நிலையத்தை ஏவியிருந்தது. அதற்கு மூன்றாம் தர நாடுகளிலிருந்து விண்வெளி வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டார். அப்படியாக இந்தியாவிலிருந்து விமானப்படையின் போர் விமானி ராகேஷ் சர்மா 1984ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரஷ்யாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இன்றுவரை இந்தியா சார்பில் விண்வெளிக்கு பறந்த ஒரே இந்தியர் இவர்தான்.
கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் வி்ண்வெளிக்கு பறந்திருந்தாலும் அவர்கள் இந்திய வம்சாவளியினராகவும், அமெரிக்காவுக்காக விண்வெளிக்கு பறந்தவர்களாகவும் பார்க்கப்படுகின்றனர். இப்படி இருக்கையில் ராகேஷ் சர்மாவுக்கு அடுத்து இந்தியாவுக்காக விண்வெளியில் இந்தியர் 4 பேர் பறக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த ககன்யான் திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். எஸ்எஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சோம்நாத், ககன்யான் திட்டத்தின் ஆளில்லா ராக்கெட் டிசம்பரில் விண்ணில் ஏவப்படும் என்று கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, "ககன்யான் திட்டத்திற்கான சோதனை ராக்கெட்டின் மூன்று முக்கிய பகுதிகள் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வந்திருக்கின்றன. இதனை அசம்பிள் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ராக்கெட்டின் மொத்த பாகங்களும் டிசம்பருக்கு ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வந்து சேரும். எனவே, டிசம்பரில் சோதனை ராக்கெட் ஏவப்படும்.
தனியார் நிறுவனங்களின் வணிக ரீதியான செயற்கைக்கோள்கள் இனி இஸ்ரோவின் கீழ் செயல்படும் என்.எஸ்.ஐ.எல். நிறுவன மூலம் ஏவப்படும். உள்நாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த தொழில்நுட்பம் வழங்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications