இன்சாட் 3DS வெற்றிகரமா வேலையை ஆரம்பிச்சிருச்சு.. விஞ்ஞானிகளை பாராட்டிய இஸ்ரோ தலைவர் சோம்நாத்!
சென்னை: இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் வெற்றிகரமாக திட்டமிட்டபடி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இன்சாட் 3டிஎஸ் திட்டத்தில் பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
வானிலை ஆய்வுக்கான 'இன்சாட் 3டிஎஸ்' அதிநவீன செயற்கைக் கோள், ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் 'இன்சாட்' வகை செயற்கை கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வானிலை ஆய்வுக்காக, இன்சாட்-3டிஎஸ் எனும் அதிநவீன செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்தது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட் மூலம் இன்று மாலை சரியாக 5.30 மணிக்கு இந்த செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கு சொந்தமான இன்சாட் 3டிஎஸ் செயற்கைக் கோள் 2,275 கிலோ எடை கொண்டது. இதில் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வுக் கருவிகள் உள்ளன. இவை புவியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வானிலை தொடர்பான தகவல்களை துல்லியமாக நிகழ் நேரத்தில் வழங்கும்.
இதன்மூலம் புயல், கனமழை போன்ற இயற்கை பேரிடர்கள் குறித்து முன்கூட்டியே அறிந்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ஏற்கெனவே விண்ணில் செயல்பாட்டில் உள்ள இன்சாட்-3டி மற்றும் 3டிஆர் செயற்கைக் கோள்களின் தொடர்ச்சியாக, இன்சாட் 3டிஎஸ் செலுத்தப்பட்டுள்ளது.
இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், "இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் வெற்றிகரமாக திட்டமிட்டபடி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இன்சாட் 3டிஎஸ் திட்டத்தில் பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ஒரு புதிய தலைமுறை செயற்கைக்கோள். வானிலை தொடர்பான பல்வேறு தரவுகளை புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாக உடனுக்குடன் தரக்கூடிய திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள். செயற்கைக்கோளின் சோலார் பேனல்கள் சரியான முறையில் இயங்குகின்றன. செயற்கைக்கோள் மிகச் சிறப்பாக செயல்படத் தொடங்கியுள்ளது.
ஜிஎஸெல்வி 14, இன்சாட் 3டிஎஸ் மற்றும் செயற்கைக்கோளில் உள்ள பேலோட் எனப்படும் தரவுகளைச் சேகரிக்கும் அமைப்பை தயாரித்த அனைவருக்கும் பாராட்டுகள். ஜி.எஸ்.எல்.வியின் அடுத்த திட்டம் நாசாவுடன் இணைந்து செயல்படுத்தப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவதையிட்டி, இஸ்ரோ தலைவர் தலைவர் சோம்நாத் சூலூர்பேட்டையில் உள்ள செங்காளம்மா கோயிலில் தரிசனம் செய்தார்.












Click it and Unblock the Notifications