இது வெறும் டெபிட் கார்டு இல்லை.. துருப்புச்சீட்டு.. மகளிர் உரிமைத் தொகை விழாவில் உதயநிதி நெகிழ்ச்சி
சென்னை: உங்கள் கைகளில் இருப்பது டெபிட் கார்டு இல்லை. உங்கள் வாழ்க்கையையே மாற்றப்போகும் துருப்புச்சீட்டு என்பதை நீங்கள் உணர வேண்டும் என கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட தொடக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
சென்னை ராயப்பேட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். தேனாம்பேட்டை மண்டலத்திற்குப்பட்ட 2 ஆயிரம் மகளிருக்கு ஏ.எடி.எம் கார்டுகளை வழங்கினார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதன் விவரம் வருமாறு:- உங்கள் கைகளில் வழங்கப்பட்டுள்ள டெபிட் கார்டு வெறும் கார்டு மட்டும் இல்லை..

உங்கள் வாழ்க்கையையே மாற்றப்போகும் துருப்புச்சீட்டு என்பதை நீங்கள் உணர வேண்டும். இந்த திட்டம் இன்றைக்கு இந்திய ஒன்றியத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. பெண் உரிமை குறித்து தந்தை பெரியார் கண்ட கனவுகளுக்கு எல்லாம் நம்முடைய திமுக அரசு செயல்வடிவம் கொடுத்து வந்து கொண்டு இருக்கிறது. கலைஞர் என்னவெல்லாம் செய்தாரோ அவரது வழியில் இப்போது நம்முடைய முதல்வர்களும் மகளிர் முன்னேற்றத்திற்குரிய திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வந்து கொண்டு இருக்கிறார்கள்.
எனவே தான் இந்த அரசை திராவிட மாடல் அரசு என்று அனைவரும் பெருமையாக கூற வேண்டும். பெண் உரிமை, மகளிர் முன்னேற்றம் என்று வருகிற போது, மகளிர் முன்னேற்றம் எந்தெந்த வழிகளில் எல்லாம் தடுக்கப்பட்டு இருக்கிறது என்பது பற்றி தந்தை பெரியார் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். மகளிர் முன்னேற்றம் மூன்று வழிகளில் தடுக்கப்பட்டு இருக்கிறது என்று பெரியார் சொன்னார்.
மூன்று தடைகளையும் நீக்கினால் மகளிர் சுதந்திரமாக வாழக்கூடிய நிலை ஏற்படும் என்று பெரியார் சொல்லிக் கொண்டு இருந்தார். முதலில் முன்னேற்றத்திற்கான கலாசார ரீதியிலான தடைகள் என்ன என்ன... தந்தை பெரியாரே சொன்னார்.. பணக்காரன், ஏழை என்ற அடிமைத்தனத்தை விட மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற அடிமைத்தனத்தை விட முதலாளி, தொழிலாளி என்ற அடிமைத்தனத்தை விட மிக மிக மோசமானதுதான் இந்த ஆண் பெண் அடிமைத்தனம் என்று பெரியார் சொனனர்.
அதிலும் கொடுமையானது விதவை என்ற சொல்லில் நடத்தப்படுகிற கொடுமை. அது மட்டும் இல்லாமல் மகளிர் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.. மகளிருக்கு படிப்பு தேவையில்லை. குடும்பத்தை பார்த்துக் கொள்வது மட்டும் தான் பெண்களுக்கான வேலை.. இப்படித்தான் நமது சமுதயாம் இருந்து வந்தது. இது எல்லாவற்றையும் எதிர்த்து பெண்களுக்கான உரிமையை கொடுத்ததுதான் திராவிட முன்னேற்ற கழகம். குழந்தை திருமணத்திற்கு எதிராக அன்றைக்கு மட்டும் இல்லை. இன்றைக்கும் குரல் கொடுத்துக் கொண்டு இருப்பதுதான் திமுக. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications