பேசக் கூட விடமாட்றாங்க.. துரைமுருகன் காமெடியா பன்றாரு! திமுக கூட்டணியில் அதிருப்தி குரல்.. இவரா?
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் நடைபெற்ற நிகழ்வுகள் காரணமாக திமுக கூட்டணியில் இருக்கும் கட்சியின் தலைவர் ஒருவர் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாகவும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு திமுக வாய்ப்பளிக்காத நிலையில் அதிருப்தி குரலை அவர் முதல் ஆளாக எழுப்பி இருப்பதாக கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள். இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி மாற்றங்கள் இருக்கும் எனவும் கூறுகின்றனர்.
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று முடிவடைந்து இருக்கிறது. இதில் பல்வேறு துறைகள் தொடர்பான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெற்றது

இறுதி நாளில் மானிய கோரிக்கைகள் விவாதம் தொடர்பாகவும் காவல்துறை மானிய கோரிக்கை தொடர்பாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்து பேசினார். இதை அடுத்து தேதி குறிப்பிடாமல் சட்ட சபை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக கள்ளக்குறிச்சி கள்ள சாராய மரணம் காரணமாக அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர். நீட் தேர்வு சட்ட முன்னுரைவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என பல நிகழ்வுகள் நடந்தன. இந்த நிலையில் கூட்டத் தொடரில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. காவல்துறை மானிய கோரிக்கை தொடர்பான விவாதத்தின் போது பேசிய அவர் 'டாஸ்மாக் மதுபானத்தில் கிக் இல்லை.. இதனால் கள்ளச்சாராயத்துதை நாடி செல்கின்றனர்.. உழைப்பவர்களுக்கு அசதிக்கு மருந்தாக மதுபானம் தேவைப்படுகிறது.. தெருவுக்கு ஒரு காவல் நிலையம் அமைத்து கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாது' என பேசினார்.
அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சசிகலா, டிடிவி தினகரன், பிரேமலதா, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் துரைமுருகன் பேச்சுக்கு கண்டன அறிக்கை வெளியிட்டனர். இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகனின் பேச்சால் கூட்டணி கட்சித் தலைவர்களும் திமுக மூத்த நிர்வாகிகளும் கூட அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் மீதான அதிருப்தி காரணமாக கூட்டணி கட்சித் தலைவர் ஒருவரே மிகுந்த சங்கடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகள் இருக்கின்றன . சட்டமன்றத் தேர்தலில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் சில கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இதன் காரணமாக வட மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி ஒன்றின் தலைவர் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடரிலும் அவர் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச முயற்சித்தார்.
ஆனால் அது தொடர்பாக அவரை சபாநாயகர் பேச அனுமதிக்கவில்லை என சட்டமன்றத்திலேயே பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். மேலும் சாதி பிரச்சனைகள் தொடர்பாகத் தான் பேசும் போது வேறு பிரச்சனைகளை பேசுங்கள் என்றும் பாஜக தொடர்பாக பேசும் போதும் வேறு பிரச்சனைகள் பேசுங்கள் எனவும் தன்னை பேசவிடவில்லை என குற்றம் சாட்டினர். அது மட்டுமல்லாமல் அவை முன்னவரான துரைமுருகன் அவையை காமெடியாக நடத்த முயற்சிக்கிறார். அவரது பேச்சுக்கள் சட்டமன்ற மாண்பை குறைக்கும் வகையில் இருக்கிறது என பேட்டியும் கொடுத்தார்.
இது அப்போதே பேசுபொருளானது. இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவல் எப்படி மிகச்சிறு கட்சிகளுக்கு கூட நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு கிடைத்திருக்கும் நிலையில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த தங்கள் கட்சிக்கு எம்பி தேர்தலில் சீட்டு ஒதுக்கப்படாததால் அவர் திமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதன் வெளிப்பாடு தான் சட்டமன்றத்தில் அவரது பேச்சு என்றும் சட்டமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தபோதும் அது எதிரொலித்தது என்கின்றனர்.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் முதன்முறையாக அதிருப்தி குரல் வெளிவந்திருக்கும் நிலையில் அது சட்டமன்றத் தேர்தல் கூட்டணி முடிவடையும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர். அதே நேரத்தில் திமுக கூட்டணி தற்போது மிக வலுவாக இருக்கும் நிலையில் சிறு பிரச்சனை ஏற்பட்டாலும் அது எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பாக அமையும் என்பதால் அதனை தற்போதே சரி செய்ய தலைமை முயற்சித்து வருவதாகவும் குறிப்பிட்ட அந்த தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications