Exclusive 5000 கோடி.. அப்ப ஆரம்பிச்ச பொய்! "அண்ணாமலையை பாஜகவே கைவிடும்".. வெளுக்கும் பத்திரிகையாளர்!
சென்னை : ரூ. 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச்சை கட்டுவதற்கான பொருளாதார நிலை அண்ணாமலைக்கு இருக்கிறது. ஆனால், மக்களின் பிரதிநிதிகளாக தங்களைக் காட்டிக்கொள்ள வேண்டிய அரசியல்வாதி, கோடிக்கணக்கான மக்கள் அன்றாட உணவிற்கு வழியின்றி வறுமையில் வாழும் நாட்டில் 5 லட்ச ரூபாய் கடிகாரத்தை கட்டியிருப்பதைப் பெருமையாகச் சொல்வது அவலமானது என ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில் விமர்சித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் மணி.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் சமீபத்திய செயல்பாடுகள் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. அண்ணாமலை கட்டியிருந்த 5 லட்சம் மதிப்புள்ள ரஃபேல் வாட்ச் மற்றும் அதைத்தொடர்ந்து அண்ணாமலை சொன்ன விளக்கம், திமுக எழுப்பும் கேள்விகள் அரசியல் களத்தைச் சூடாக்கியுள்ளன.
தேர்வு கிடையாது.. ரூ.36,000 முதல் ரூ.1.80 லட்சம் வரை சம்பளம்.. அழைக்கும் இந்திய விமான ஆணையம்!
அதேபோல சமீபத்தில் கோவையில் காது கேளாதோருக்கு காது கேட்கும் கருவி வழங்கியபோது, ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள கருவி என அண்ணாமலை பேசியிருந்தார். அதன்பிறகு அந்தக் கருவி விலை ரூ. 350 என கண்டறியப்பட்டு, அண்ணாமலை கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதையடுத்து, தனக்கு லயன்ஸ் கிளப்பை சேர்ந்தவர்கள் தவறாகச் சொல்லிவிட்டதாகப் பின்வாங்கினார்.
இந்நிலையில், அண்ணாமலையின் அரசியல் செயல்பாடுகள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி, ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு :
அவலமான அரசியல்
அண்ணாமலை அவலமான அரசியலை செய்கிறார் என்பதற்கான இன்னொரு எடுத்துக்காட்டு தான் அவர் ரஃபேல் வாட்ச் பற்றிப் பேசியது. 5 லட்ச ரூபாய் கட்டுவதெல்லாம் பெரிய விஷயம் கிடையாது. அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக 10 ஆண்டுகள் பணியில் இருந்தவர், அவரது மனைவி படித்தவர், சொந்தமாக நிறுவனம் நடத்தி வருபவர், அண்ணாமலையே தனது மனைவி தன்னை விட 7 மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார் எனக் கூறியுள்ளார். 2021 தேர்தலில் நிற்கும்போது கொடுத்த தகவல்படியே அவர் ஓரளவுக்கு வசதியானவர் தான் அண்ணாமலை. ரூ. 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச்சை கட்டுவதற்கான பொருளாதார நிலை அண்ணாமலைக்கு இருக்கிறது. முறையான தொழில் செய்து, அல்லது ஊதியம் பெற்று அந்த வாட்ச்சை முறையாக வாங்கக்கூடிய ஆளுமை, பொருளாதார வல்லமை அண்ணாமலைக்கு இருக்கிறது. அவர் 5 லட்ச ரூபாய் வாட்ச்சை தனது சொந்தப் பணத்தில் வாங்கி அணிவதில் ஆச்சர்யம் இல்லை.
ரஃபேல் - ஊழல்
ஆனால், ரஃபேல் விவகாரத்தை இழுப்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. ரஃபேல் என்றாலே நமக்கு விமான ஊழல் தான் நினைவுக்கு வரும். ரஃபேல் விமான கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்பது இந்திய உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு. ஆனால், பிரான்ஸில் அதுதொடர்பான வழக்கு இன்னும் நடந்து வருகிறது. இங்கு மக்கள் மறந்துபோன விஷயத்தை 'ரஃபேல்' எனச் சொல்லி நினைவூட்டி இருக்கிறார் அண்ணாமலை. அரசியல்வாதிகள் பொதுவாக எளிமையாகவே தங்களைக் காட்டிக் கொள்வார்கள். பென்ஸ் காரில் செல்லாமல், அம்பாஸிடர் காரை பயன்படுத்துவார்கள். ஆனால், பென்ஸ் காரில் இருக்கும் வசதிகள் அதில் இருக்கும். அப்படித்தான் அரசியல்வாதிகள் இமேஜ் கான்சியஸாக இருப்பார்கள். மக்களை எளிதில் அணுகுவதற்காக, அப்படி எளிமையாக தங்களை அடையாளப் படுத்திக்கொள்வார்கள்.
கீழ்த்தரமான பேச்சு
மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்பிய பிறகு இந்தியா முழுவதும் பயணித்தார். தமிழ்நாட்டுக்கு வரும்போது மதுரையில் ஒரு பெண், குளித்துவிட்டு, தனது உடை காயும் வரை ஆற்றின் அருகே நிற்பதைப் பார்க்கிறார். அன்று இருந்த வறுமை இந்தியாவின் நிலை அது. அதைப் பார்த்த காந்தி அதற்குப் பிறகு 30 ஆண்டுகாலத்திற்கும் மேல் தனது வாழ்நாள் முழுவதும் ஒற்றையாடை அணிந்துதான் அவர் வாழ்ந்தார். அரசியல்வாதிகள் எப்போதும், சாமானிய மக்களோடு நெருக்கமாகவே அடையாளம் காணப்பட விரும்புவார்கள். சாமானிய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவே விரும்புவார்கள். நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி, இளைஞர்களே அன்றாட சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு வரும் ஒரு நாட்டில், ஒரு அரசியல்வாதி, 5 லட்சத்திற்கு வாட்ச் கட்டி இருக்கிறேன் என்று பெருமைப்பட முடியுமா? அது எவ்வளவு கீழ்த்தரமான பேச்சு? மக்களை அவமதிக்கும் செயல்பாடு.
மக்களைச் சுரண்டிப் பார்ப்பது
ரஃபேலின் உதிரி பாகங்களில் செய்யப்பட்டதாகச் சொல்கிறார் அண்ணாமலை. 500 கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட லிமிடெட் எடிஷனின் 149வது வாட்ச் இது என்கிறார். அண்ணாமலை சொல்வதை மற்ற எந்த பாஜக தலைவரும் இதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. ஏழைகள் வாழும் நாட்டில் பகட்டாக, பெருமையாக பல லட்சத்தில் வாட்ச் வாங்கி அணிவதை எந்த அரசியல்வாதி பெருமையாகச் சொல்லுவார்? ரஃபேல் என்ன இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானமா? வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வாட்ச்சை வாங்கிவிட்டு அதை தேசபக்தி எனச் சொல்வது மக்களை முட்டாளாக்கும் வேலைதானே? அண்ணாமலை ஊழல் செய்தார், லஞ்சம் வாங்கினார் என்றெல்லாம் நான் குற்றம்சாட்டவில்லை. ஆனால், அன்றாட சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் மக்கள் கோடானுகோடிப்பேர் வாழும் நாட்டில் 5 லட்ச ரூபாய் வாட்ச் வைத்திருக்கிறேன் என்று சொல்வது சாமானிய மக்களை கீழ்த்தரமாகப் பார்ப்பது. ஒரு தேசியக் கட்சியின் மாநில தலைவர் இப்படிப் பேசுவது, அந்த மாநிலத்தின் மக்களைச் சுரண்டிப் பார்ப்பது. வேலையின்மையும், வறுமையும் தாண்டவமாடும் நாட்டில் யாராவது இப்படிச் சொல்வாரா?
பொய் தான் 24 மணி நேரமும்
முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றபோது, அவர் 5000 கோடி ரூபாய் பணத்தை துபாய்க்கு கொண்டு சென்றதாக குற்றம்சாட்டினார் அண்ணாமலை. இன்று ஒரு அரசியல்வாதி 5,000 கோடி வைத்திருக்கிறார் என்றால் அதை பணமாக விமானத்தில் எடுத்துச் செல்ல முடியுமா? சாமானிய மனிதர்களுக்குக் கூட தெரிந்த விஷயம் ஐபிஎஸ் அதிகாரிக்கு தெரியுமா? தெரிந்தே சொல்கிற பச்சைப் பொய் தானே? மக்களின் உணர்வுகளுக்கு தீனி போடும் செயல் தானே? அன்று முதல் இப்போது காது கேட்கும் கருவி வரை எல்லாமே பொய்களாகத்தானே பேசி வருகிறார். பொய் தான் அண்ணாமலையின் முதலீடு. 24 மணி நேரமும் பொய் பேசுவது மட்டுமே அண்ணாமலையின் வேலை. அவரை யாரும் தவறாக வழிநடத்த முடியாது. அவர் தான் எல்லோரையும் தவறாக வழிநடத்தக்கூடியவர்.
பகட்டு
காது கேட்கும் கருவி கொடுத்தால் கொடுத்தோம் என்று சொல்லிவிட்டுப் போகலாமே, 10,000 ரூபாய் என்று ஏன் சொல்கிறார்? காது கேளாதோருக்கு காது கேட்கும் கருவிகள் கொடுக்கும் கட்சிகள் எல்லாம், விலையையும் சேர்த்தா சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி சொன்னதால் தானே மாட்டிக்கொண்டார்? அண்ணாமலை 10000 ரூபாய் என்று சொன்னதால் தானே, அந்தக் கருவி ரூ.350 தான் என கண்டுபிடித்துச் சொன்னார்கள். எதற்கு இந்த பகட்டு.. படாடோபம்.. நீங்கள் விலையைச் சொன்னால் தான் அந்தக் கருவியை வாங்குவோம் என்று பயனாளிகள் சொன்னார்களா? கட்சியின் விளம்பரத்திற்காக காது கேட்கும் கருவிகளைக் கொடுத்தாலும், அதனால் சிலர் பயன்பெறுகிறார்கள். அதனால், நிச்சயம் பாராட்டுகிறோம். அதை தாராளமாகச் செய்யலாம்.
காமெடி அரசியல்
ஆனால், தேவையில்லாமல் விலை 10000 ரூபாய் எனச் சொல்லி மாட்டிக்கொள்கிறார். அண்ணாமலை, பொறுப்புக்கு வந்த ஒன்றரை வருடங்கள் தான் என்பதால் முதிர்ச்சியடையாத அரசியல்வாதியாக இருக்கிறார். அவர் தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால், இதுபோன்ற காமெடிகளை தான் அரங்கேற்றுவேன் என்றால் அவரது கட்சியே அவரைக் கைவிட்டுவிடும். அவரது நலனுக்காகவாவது, மற்ற கட்சிகளில் உள்ள கண்ணியமான அரசியல்வாதிகளைப் போல நடந்துகொள்ள வேண்டும். தமிழக பாஜக தலைவர்களாக இருந்த பலரை எனக்கு நன்கு தெரியும். அவர்கள் யாருமே இந்தமாதிரி நடந்துகொள்ளவில்லை. எல்லாக் கட்சிகளிலும், காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளிகள் இருக்கிறார்கள். ஆனால், அதிகமாக இருக்கும் கட்சி பாஜக. பாஜகவில் ஒரு மேடையில் பேசிவிட்டு கீழே இறங்குபவர்களைக் கூட போலீஸ் அள்ளிச் செல்கிறது.