தேசிய கொடி கூட சீனாவில் இருந்து இறக்குமதி.. ”புன்முறுவலோடு சென்ற ஓம் பிர்லா” சபாநாயகர் அப்பாவு வேதனை
சென்னை: சீனாவில் தயாரித்த தேசியக் கொடியை கையில் ஏந்தி சென்றது வேதனையானது என்று தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
கனடாவில் ஹாலிபேக்ஸ் நகரில் 65வது சபாநாயகர்களுக்கான காமன்வெல்த் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின், மாநிலங்களின் சபாநாயகர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் மாநில சபாநாயகர்கள் கலந்துகொண்டனர். தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இந்த மாநாட்டில் பங்கேற்றார்.
இந்த காமன்வெல்த் மாநாடு நடைபெற்ற வளாகத்திற்கு லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் சபாநாயகர்கள் தங்களது கைகளில் தேசியக் கொடி ஏந்திய வண்ணம் பேரணியாக வந்தனர். அந்த தேசியக்கொடிகளில் 'மேட் இன் சைனா' என எழுதப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் இந்திய தேசியக் கொடியில், 100 சதவிகிதம் பாலியஸ்டர் என்ற வாசகத்திற்குக் கீழ், மேட் இன் சைனா என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
ஆர்டர் கொடுத்தா ஒரே இரவில் இங்கேயே 100 கோடி தேசியக்கொடி வாங்கலாம்.. ஏன் இந்த நிலை?- அப்பாவு ஆதங்கம்!
சென்னை திரும்பிய அப்பாவு
இந்த நிலையில் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ற பின்னர் தமிழக சபாநாயகர் சென்னை திரும்பினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில், காமன்வெல்த் மாநாடு மிக சிறப்பாக நடைபெற்றது. ஏற்கனவே சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்காக டிஜிட்டல் மயமாகியது. அதேபோல் வினா - விடை நேரத்தை நேரலையாக ஒளிபரப்பி வருகிறோம்.
டிஜிட்டல் மயம்
அதுமட்டுமல்லாமல் நமது சட்டமன்றம் தொடங்கப்பட்ட 1921 முதல் தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட சபை நடவடிக்கைகளை இணையத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. மிக விரைவில் 100 ஆண்டு கால சட்டமன்ற நடவடிக்கைகளையும் இணையத்தில் பார்க்கலாம் என்று தெரிவித்தார்.
தேசியக் கொடி விவகாரம்
தொடர்ந்து தேசியக் கொடி விவகாரம் குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, வெளிநாடுகளில் இருந்து இந்திய தேசியக் கொடி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியதாக தெரிந்துகொண்டோம். அந்த அடிப்படையில், தேசியக் கொடிகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
அப்பாவு வேதனை
இன்னும் சொல்லப்போனால் 1962ல் சீனாவுக்கு எதிராக போர் நடைபெற்றது. அதன் பின் 57 ஆண்டுகளில் பெரியளவில் இந்திய - சீன எல்லையில் பதற்றம் இல்லை. அண்மையில் மகாபலிபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது.அந்த சந்திப்புக்கு பின் சில நேரங்களில் பதற்றம் நிலவி வருகிறது. குறிப்பாக கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த கல்லறை கூட காயவில்லை. அதற்குள் இந்திய தேசியக் கொடியை சீனாவில் இருந்து தயாரித்து, அதை நாடாளுமன்றம் உள்ளிட்ட அனைத்து மாநில சபாநாயகர்களும் கையில் ஏந்தி சென்றது எல்லோருக்கும் வேதனையான விஷயம்.