"அதிமுக எங்கே போகுதுன்னே தெரியல.." அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே ராஜினாமா.. 'அஸ்பயர்' அதிரடி
சென்னை: நாட்டிலேயே தொழில்நுட்ப பிரிவு என்ற ஒன்றை முதன்முதலில் அமைத்த கட்சிகளில் அதிமுகவும் ஒன்றாகும். தமிழகம் முன்னேறிய மாநிலம். எனவே, வாக்காளர்களில் பெரும்பாலானோர் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர்.
எனவேதான், ஜெயலலிதா காலம் தொட்டு அதிமுக, தனது தொழில்நுட்ப பிரிவின் உட்கட்டமைப்பு மற்றும் அதன் பணியாளர்களை தொடர்ந்து மேம்படுத்தியது.
கடந்த சட்டசபை தேர்தலின்போது அதிமுக ஐடி விங் பெரும் உழைப்பை கொட்டியது. 10 வருடங்கள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தாலும் பெரும் அதிருப்தி அலை எழாமல் பார்த்துக் கொண்டதில் ஐடி விங் முக்கிய பங்காற்றியது.

ஐடி விங்
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் செய்த நல்ல விஷயங்களை உடனுக்குடன் வாட்ஸ்அப், டுவிட்டர், பேஸ்புக் என சமூக ஊடகங்களிலும், பிற ஊடகங்களிலும் கொண்டு சென்று சேர்த்து, மக்களிடம் நல்ல இமேஜ் உருவாக்கியது ஐடி விங்.

சலசலப்பு
ஆனால் இப்போது ஏனோ ஐடி விங்கில் சலசலப்பு ஓடிக் கொண்டு இருக்கிறது. அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல பொறுப்பாளர் அஸ்பயர் சுவாமிநாதன் இன்று கட்சியிலிருந்து விலகுவதாக டுவிட்டரில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

எங்கே போகும் இந்த பாதை
அதிமுகவில், நல்ல தொழில்முறையாளர்கள் மற்றும் திறமையாளர்களுக்கு இனியும் மதிப்பு இல்லை. எதிர் காலம் குறித்து சிந்தனை, எதை நோக்கி போகிறோம் என்ற இலக்கு எதுவுமே இல்லாமல் கட்சி இருப்பது இன்னும் மோசம். என்னை கட்சி பதவியிலிருந்து நீக்கிவிடுமாறு, கடந்த வாரமே, தலைமைக்கு சொல்லிவிட்டேன். இப்போது நான், அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துவிடுகிறேன். இவ்வாறு அஸ்பயர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

ஓ. பன்னீர் செல்வம் ஆதரவாளர்
அதிமுக ஐ.டி அணியின் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தவர் அஸ்பயர் சாமிநாதன். ஆனால் 2016ம் ஆண்டு அவரை அந்த பதவியில் இருந்து நீக்கி விட்டு சிங்கை ராமச்சந்திரனை நியமித்தார் ஜெயலலிதா. அஸ்பயர் சுவாமிநாதன், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளராக அறியப்படுபவர். இப்போது அதிமுகவில் பன்னீர் செல்வம் அணியினருக்கு போதாத காலம் போல. கேட்ட பதவியும் கிடைப்பதில்லை. இருக்கும் பதவியிலும் அவர்களுக்கு நிலையில்லாத நிலைதான் இருக்கிறது போல.












Click it and Unblock the Notifications